பட்ஜெட் அறிவிப்பில் சாமானியர்களுக்கு 2 பெரிய அடி! இப்படி செய்துவிட்டாரே நிர்மலா சீதாராமன்
Recommended Video
டெல்லி: நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில், சாமானிய மக்கள் மீது இரு அடி 'நங்' என்று வைக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியின் உச்சம்.
நாட்டின், முழு நேர பெண் நிதி அமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட், மோடி அரசின் 2வது ஆட்சி காலத்தின் முதல் பட்ஜெட் என்றெல்லாம் சிறப்பு அடைமொழிகளுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.
தங்கள் அரசை 2வது முறையாக தொடர்ந்து தேர்ந்தெடுத்த மக்களுக்கு சலுகை மழை கிடைக்கும் என சாமானியர்கள் எதிர்பார்த்தனர்.
5 ஆண்டுகளுக்குள் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர்.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
சலுகை இல்லை
ஆனால், பட்ஜெட்டில், சலுகை மழை கிடைக்காவிட்டாலும், கூடுதலாக வரியை போட்டு, அவர்களுக்கு தலை மீது அடி கொடுத்துள்ளார் நிதி அமைச்சர். வருமான வரி உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக தொடரும் என்ற அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், மேலும் இரு முக்கிய அறிவிப்புகள் சாமானியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடியவை.
பெட்ரோல், டீசல்
முதலாவது அறிவிப்பு, பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி. சாலை மற்றும் அடிப்படை கட்டமைப்புக்கு இந்த கூடுதல் வரி பணத்தை பயன்படுத்தப்போகிறோம் என்று அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். ஆனால், ஏற்கனவே மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள பலவகை வரிகளால், பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு ஏற்றம் கண்டுள்ளது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவராமல் தபாய்த்து வருகிறது மத்திய அரசு.
அத்தியாவசிய பொருட்கள்
இந்த நிலையில், லிட்டர் பெட்ரோல், டீசல் மீது தலா 1 ரூபாய் செஸ் வரி கூடுதலாக விதிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இது சரக்கு வாகனங்கள் செலவை அதிகரித்து, காய்கறி, பழங்கள், பால் என பல அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு வழி வகுக்கும். சாமானியர்கள், இருசக்கர வாகனங்களையும், நடுத்தர மக்கள், கார்களையும் பயன்படுத்துவது கூட, இதனால் குறையும்.
தங்கம் விலை
மற்றொரு அறிவிப்பு 10 சதவீதமாக இருந்த தங்கம் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் மீதான 2.5 சதவீத வரி விதிப்பாகும். அதன் மூலம், இனி வரி 12.5 சதவீதமாக இருக்கப்போகிறது. சாமானியர்கள், குருவி சேர்ப்பதை போல பணம் சேர்த்து, தங்கள் மகள் திருமணத்திற்கு தங்கம் வாங்குவார்கள். இப்படி வரியை உயர்த்தி அவர்களின் கோபத்தை கிளறியுள்ளது அரசு. அதுவும் பெண் நிதி அமைச்சரே, இப்படி ஒரு வரியை தங்கத்தின் மீது விதித்துவிட்டாரே என்று இல்லத்தரசிகள் ஆதங்கப்படுகிறார்கள்.