மத்திய பட்ஜெட் 2019: ஒவ்வொரு கிராமத்திலும் இணைய வசதி கிடைப்பதை உறுதி செய்வோம்: நிர்மலா சீதாராமன்
டெல்லி: ஒவ்வொரு கிராமத்திலும் இணைய வசதி கிடைப்பதை உறுதி செய்வோம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
ஒவ்வொரு பஞ்சாயத்து அல்லது கிராம பஞ்சாயத்துகளில் அதிவேக இணைய இணைப்புகள் கிடைப்பதை உறுதி செய்வோம். தனியார் பங்களிப்புடன் இதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.
மேலும் நகரங்களுக்கு இடம்பெயர்வதை தவிர்க்க கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். 5.6 லட்சம் கிராமங்களில் திறந்தவெளி கழிப்பறைகள் அகற்றப்பட்டுள்ளன.
2024-க்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வோம். குறைந்த பட்ஜெட் வீடுகள் வாங்குவோருக்கான வரிச்சலுகை ரூ.3.5 லட்சமாக அதிகரிக்கப்படும்.
தேசிய அளவிலான விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது கிராமங்களில் இணைய இணைப்பு கொடுக்கும் திட்டத்தை 2011-ல் முன்னெடுத்தது. 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய இணைப்பு கொடுக்கும் திட்டமாக தொடங்கப்பட்டது. ரூ70,000 கோடி முதலீட்டில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.