மோடியின் கடைசி அஸ்திரம்.. நாளை பட்ஜெட்டின் போது இந்த அறிவிப்பை வெளியிட திட்டம்!
நாளை தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் கிராமங்களை குறி வைத்தும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் நிறைய திட்டங்கள் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
Recommended Video
டெல்லி: நாளை தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் கிராமங்களை குறி வைத்தும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் நிறைய திட்டங்கள் இருக்கும் என்று கூறுகிறார்கள். முக்கியமாக கிராமப்புற ஏழைகளுக்காக இதுவரை இல்லாத அளவிற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
நாளை காலை இடைக்கால மத்திய பட்ஜெட் லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொறுப்பு நிதித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
இதில் தேர்தலை முன்னிட்டு பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மக்களின் மனதை கவர பாஜகவிடம் இருக்கும் முக்கிய அஸ்திரம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன திட்டம்
அதன்படி கிராமப்புற ஏழைகளை கவரும் வகையில் நாளை மட்டும் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டங்கள் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. சென்ற ஆண்டு கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட 16% அதிகம் ஆகும். இதுவரை இந்த அளவிற்கு மத்திய அரசு எப்போதும் கிராமங்களுக்கு நிதி ஒதுக்கியது இல்லை.
வேலை வாய்ப்பு
அதேபோல் கிராமங்களில் உள்ளவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை பெறும் வகையிலும் இதில் நிறைய திட்டங்கள் வர இருக்கிறது. சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் வகையில் ஏழை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பும் நாளை வெளியாகும்.
மக்களை கவரும்
இந்த திட்டங்கள் கிராமங்களில் உள்ள மக்களை பெரிய அளவில் கவரும் என்று கூறுகிறார்கள். தேர்தலில் இவர்களின் வாக்குதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இவர்களை கவரவே இந்த திட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வர நினைக்கிறது. நாளை இதுகுறித்த முழுமையான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
ராகுல் கொண்டு வந்தார்
நாட்டில் உள்ள ஏழைகளை கவரும் வகையில் அனைவருக்கும் குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்து இருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக இந்த புதிய திட்டத்தை கொண்டு வர முடிவெடுத்து இருக்கிறது என்கிறார்கள்.