உங்களுக்கு சொந்த வீடு இருக்கிறதா, நீங்கள் சிறு சேமிப்பு செய்துள்ளீர்களா? ஸ்வீட் எடுங்க, கொண்டாடுங்க
Recommended Video
டெல்லி: உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு, சொத்து உள்ளதா அப்படியானால் இந்த பட்ஜெட்டால் நீங்கள் மகிழ்ச்சி அடையலாம்.
தற்போதைய நடைமுறைகளின்படி, உங்களிடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகள் இருந்தாலும் அதில் ஒன்றை தான் நீங்கள் வசிப்பதற்காக பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஆனால் பணி நிமித்தமாகவோ அல்லது தொழில் நிமித்தமாகவோ இரு இடங்களில் வீடுகள் இருப்பது என்பது தற்போது சகஜமான சூழ்நிலையாக மாறி உள்ளது.
மகிழ்ச்சி
இருப்பினும் வாடகைக்கு விடப்படாத வீட்டையும் சேர்த்து தற்போது வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலை, இடைக்கால பட்ஜெட்டில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது தான் வீட்டு உரிமையாளர்களின் சந்தோஷத்திற்கு காரணம்.
இரு வீடுகள்
இதுபற்றி இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, "இரண்டு இடங்களில் தங்கள் குடும்பத்தை பராமரிக்க வேண்டிய சூழ்நிலைக்காகவோ, வேலை வாய்ப்புக்காகவோ, குழந்தைகளின் கல்விக்காகவோ, பெற்றோரை பராமரிக்கவோ, இப்படி ஏதேதோ காரணங்களுக்காக இரு இடங்களில் வீடுகளை பராமரிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே இரண்டாவது வீட்டுக்கு வரியை நீக்குவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.
வாடகை மீது வரி சலுகை
அதேநேரம் இரண்டு வீடுகளுக்கும் மேலாக ஒருவருக்கு வீடு இருக்குமானால் அது வாடகைக்கு விடப்படாவிட்டாலும் கூட, அதற்கு வரி வசூல் என்பது தொடரத்தான் செய்யும். அதேநேரம், தனி நபர்களுக்கு இல்லாமல் நிறுவனங்கள் போன்றவற்றுக்கு உங்கள் இடத்தை வாடகைக்கு விட்டால் இதுவரை ரூ.1,80,000 ஆண்டு வருவாய் கிடைத்தால் வரி கட்டியிருப்பீர்கள். இந்த தொகை, ஆண்டுக்கு, 2,40,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வட்டி மீது வரி குறைப்பு
வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் செய்யப்படும் டெபாசிட்கள் மீதான வரி (TDS), உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இதுவரை இதுபோன்ற வட்டி வருவாய் அளவு என்பது ரூ.10,000 என்ற அளவில் இருந்த நிலை மாற்றி, 40,000 வரையிலான வட்டி வருவாய்க்கு வரி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிறு சேமிப்பு பலனாளிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.