Budget 2019 india: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்.. எப்போது? என்ன எதிர்பார்க்கலாம்?
Recommended Video
டெல்லி: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இப்போது தாக்கல் செய்யப்படுவது இடைக்கால பட்ஜெட் என்று அழைக்கப்படுகிறது. நடப்பு லோக்சபா பதவிக்காலம் நிறைவடையும் தருவாயில் இருப்பதால் இது இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிதியாண்டின் முதல் 4 மாதங்களுக்கான செலவீனங்களுக்குதான் நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்படும். தேர்தலுக்கு பிறகு, புதிய லோக்சபா உருவானதும் அந்த அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறுவதால், அவருக்கு பதில் நிதித்துறை பொறுப்பை ஏற்றுள்ள பியூஷ் கோயல், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பொதுவாக இடைக்கால பட்ஜெட் என்பது விவாதம் இன்றியே லோக்சபாவில் நிறைவேற்றப்படுவதுதான் வழக்கம். இம்முறையும் அப்படித்தான் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.
தேர்தல் காலம் என்பதால், இந்த பட்ஜெட்டில், விவசாயிகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு சலுகைகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சம்பளக்காரர்களின் இந்த மனக் குமுறலை கருத்தில் கொண்டு வருமான வரி உச்சவரம்பு ஆண்டுக்கு 3 லட்சம் என்ற அளவில் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.