இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக உள்ளது.. பணத்தட்டுப்பாடு கட்டுப்பாட்டில் உள்ளது.. மோடி உரை!
இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக உள்ளது, பண தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தி உள்ளோம் என்று பிரதமர் மோடி லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக உள்ளது, பண தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தி உள்ளோம் என்று பிரதமர் மோடி லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் 2020-2021ம் ஆண்டிற்கான பட்ஜெட் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் இன்று லோக்சபாவில் உரையாற்றினார். பிரதமர் மோடியின் இந்த உரை பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி தனது உரையில், குடியரசுத் தலைவரின் உரை ஒரு புதிய பாதையை இந்தியாவிற்கு காட்டியுள்ளது. மக்கள் புதிய பாதையில் செல்கிறார்கள். எங்களின் செயலை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கிறது. நாங்கள் ஏன் இவ்வளவு வேகமாக செயல்படுகிறோம் என்று எங்களிடம் கேட்கிறார்கள். இந்த மக்கள் அரசை மாட்டும் மாற்றவில்லை. அவர்களும் எங்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.
கடந்த வருடம்
கடந்த 70 வருடங்களில் இருந்தது போல இந்த நாடு இப்போதும் இருந்திருந்தால், 370 சட்டப்பிரிவை நீக்கி இருக்க முடியாது. நாடு மாறி இருக்கிறது. நாங்கள் புதிய பாதையை தேர்வு செய்தோம். அதற்காக உழைத்தோம். முத்தலாக் சட்டம் கொண்டு வந்தோம் . ராமர் கோவில் கனவு தற்போது நினைவாகிக் கொண்டு இருக்கிறது. நாங்கள் இல்லாமல் இதெல்லாம் நடந்து இருக்காது.
70 வருடம் எப்படி
70 வருட சுதந்திரத்திற்கு பின் இப்போதுதான் இந்தியா சரியாக செல்கிறது. இந்தியாவின் வளர்ச்சி வேகம் எடுத்துள்ளது. அதனால்தான் நாங்கள் மேற்கொள்ளும் பணிகளை வேகமாக மேற்கொள்கிறோம். எங்கள் வேகத்தை பார்த்து மக்கள் சந்தோசம் அடைந்துள்ளனர். அடுத்த ஐந்து வருடம் எங்களுக்குத்தான். வடகிழக்கு மாநிலங்கள் டெல்லியோடு நெருக்கமாகிவிட்டது.
வடகிழக்கு எப்படி
வடகிழக்கு மாநிலங்களுக்காக நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். அவர்கள் வேகமாக முன்னேறி வருகிறார்கள். அங்கு பல போராளி குழுக்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டார்கள். இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக உள்ளது. பண தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தி உள்ளோம். சிறுகுறு தொழில்கள் சரியாக இருக்கிறது. ஜிஎஸ்டி மூலம் வருவாய் அதிகரித்துள்ளது . நாட்டின் கட்டமைப்பு வசதி பெருகி, வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளது, என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.