பட்ஜெட் 2021 : புது புது திட்டங்கள்...ரயில்வே துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்பு
புதுடெல்லி : நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பாதுகாப்பு தொடர்பான பணிகள், மெகா உள்கட்டமைப்பு உள்ளிட்ட செலவீனங்களுக்காக 1.81 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை, ரயில்வேதுறை கேட்டுக் கொண்டுள்ளது. இதில் விபத்துக்களை தடுப்பதற்கு பாதுகாப்பை பலப்படுத்த ரூ.30,000 கோடி வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.
2024 ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள தேசிய ரயில் திட்டத்திற்கான வரைவு அறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8000 கி.மீ., வரை புல்லட் ரயில் திட்டம் 2051 க்குள் விரிவுபடுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மும்பை - ஆமதாபாத் இடையேயான அதிவிரைவு ரயில் திட்டத்தை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
ரயில் விபத்து எண்ணிக்கையை பூஜ்ஜியமாக மாற்றுவதற்காக 2022-23 ல் துவங்கப்பட உள்ள ரயில்வே திட்டத்திற்கான நிதியை ரூ.20,000 கோடியில் இருந்து, ரூ.30,000 கோடியாக உயர்த்தவும் ரயில்வே நிர்வாகம் கேட்டுள்ளது.
800 கி.மீ., மேலாக லக்னோ, மதுரா, அயோத்தி, பிரயாக்ராஜ், ஆக்ரா, ரேபர்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதே போல் வாரணாசி-பாட்னா, அமிர்தசரஸ்- ஜம்மு, பாட்னா - கவுகாத்தி, ஐதராபாத் - பெங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் புதிய புல்லட் ரயில் திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பிற்கு பிறகு சமீப காலமாக தான் ரயில்வே துறை சகஜநிலைக்கு திரும்பி வருகிறது. இருந்தும் சில வழித்தடங்களில் குறைவான அளவிலேயே பயணிகள் வருவதால், இவற்றை சரி செய்யும் விதமாக கூடுதலாக நிதியை ரயில்வே துறைக்கு ஒதுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.