விவசாயிகள் நலனில்... மத்திய அரசுக்கு அதிக அக்கறை உள்ளது.. பட்ஜெட் உரையில் நிதியமைச்சர்
டெல்லி: விவசாயிகள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது என்று கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் இலக்கை 16.5 லட்சம் கோடியாக உயர்த்துவது, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளைத் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
மத்திய அரசின் 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக இந்த பட்ஜெட் முதல் முறையாகக் காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது
அதேபோல பெண்கள் மற்றும் விவசாயிகளை மையமாகக் கொண்டே தனது உரையை நிதியமைச்சர் தொடங்கினார். தனது பட்ஜெட் உரையில், வேளாண் துறை குறித்துப் பேசு தொடங்கிய நிர்மலா சீதாராமன், விவசாயிகளின் நலனில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறினார். அப்போது எதிர்க்கட்சி எம்பிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், "அனைத்து பயிர்களின் உற்பத்தி விலையைவிடக் குறைந்தபட்சம் 1.5 மடங்கு விலையை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கை மாற்றப்பட்டுள்ளது. இந்தாண்டு மட்டும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு நிலை இரட்டிப்பாக்கப்பட்டது. இதன் மூலம் 1.5 கோடி விவசாயிகள் பலனடைந்தனர்.
அதேபோல அரசின் நேரடி கொள்முதலும் நிலையான வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்குக் கிடைக்கும் தொகையும் அதிகரித்துள்ளது. கோதுமை விவசாயிகளுக்கு 2013-14ஆம் ஆண்டு 33,874 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இது 2019-20 ஆண்டில் 62,802 கோடி ரூபாயாகவும் 2020-21 ஆண்டில் 75,060 கோடி ரூபாயாகவும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
கல்விக்கு முக்கியத்துவம்...மத்திய பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்
2013-14ஆம் ஆண்டில் பருத்தி விவசாயிகளுக்கு 90 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. இந்தத் தொகை 2020-21ஆம் ஆண்டில் 25 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 43.36 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர்" என்றார்.
அதேபோல இந்தாண்டு விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் இலக்கை ரூ .16.5 லட்சம் கோடியாக உயர்த்தவுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.