எல்ஐசி பங்குகள் விற்பனை.. காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீடு 74% ஆக உயர்வு- பட்ஜெட் அறிவிப்பு
டெல்லி: எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
Recommended Video
காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டின் அளவு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
2021-22ம் நிதியாண்டு பட்ஜெட்டில், பொது நிறுவனங்களில் தனியார் மயம் செய்வது என்ற கொள்கை அதிகம் எதிரொலித்ததை கவனிக்க முடிகிறது. அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளை, ஐபிஓ (IPO) அடிப்படையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
எல்.ஐ.சி-யில் வைத்திருக்கும் 25% பங்குகளை பல தவணைகளில் விலக்கிக் கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி வைத்திருக்கும் பங்குகளையும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐடிபிஐ வங்கி, பிபிசிஎல், ஷிப்பிங் கார்ப்பரேஷன், கன்டெய்னர் கார்ப்பரேஷன், நீலாச்சல் இஸ்பத் நிகம் உள்ளிட்ட நிறுவனங்களை இந்த நிதியாண்டு தொடக்கத்தில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.டி.பி.ஐ வங்கியை தனியார் மயமாக்கிய அனுபவத்தை கொண்டு மேலும் 2 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும்.
காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும், மக்களுக்குக் காப்பீடு வசதி எளிதாகக் கிடைக்கும் வகையிலும், அந்நிய முதலீட்டின் அளவை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். இதன்படி, குறைந்தபட்சம் 50 சதவீத இயக்குநர்கள் சுயாட்சி இயக்குநர்களாகும். இயக்குநர்கள் குழுவில், முக்கிய மேலாண்மை நிர்வாகத்தில் இருப்போர் இந்தியாவில் வசிப்பவராக இருப்பார்கள்.
இதை நடைமுறைப்படுத்த, 'காப்பீடு சட்டம் 1938'ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு அந்நிய முதலீடு உச்ச வரம்பு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படும். தற்போது ஆயுள் காப்பீடு நமது நாட்டு ஜிடிபியில் 3.6 சதவீதம் அளவுக்கு மட்டுமே உள்ளது. எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
2015ம் ஆண்டு காப்பீடு நிறுவனத்தில் அந்நிய முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.