ரயில்வேக்கு மொத்தமாக அள்ளிக் கொடுத்த நிர்மலா.. 2013-14 பட்ஜெட்டை விட 9 மடங்கு அதிக ஒதுக்கீடு
2013-2014- ம் ஆண்டு பட்ஜெட்டை விட 9 மடங்கு அதிகமாக ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
டெல்லி: 2023-2024 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசிக்க தொடங்கினார். இதில் 2013-2014- ம் ஆண்டு பட்ஜெட்டை விட 9 மடங்கு அதிகமாக ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது.
குடியரசு தலைவர் உரையை தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலானது. நடப்பு நிதி ஆண்டில் பொருளாதர வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
நிர்மலா சீதாராமனின் 5-வது பட்ஜெட்
இந்த நிலையில், 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிதியமைச்சராக பொறுப்பேற்று தொடர்ந்து அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் மோடி 2.0 அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும்.
ரயில்வே துறை குறித்த அறிவிப்புகள்
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ரயில்வேக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது ரத்து செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டுடன் இணைந்தே ரயில்வே நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் ரயில்வே துறை குறித்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. ரயில்வேயை பொறுத்தவரை முடிவு பெறாமல் இருக்கும் திட்டங்களை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு
பட்ஜெட்டில் ரயில்வேக்கு துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நிதி ஒதுக்கீடு இதுவே ஆகும். கடந்த 2013-14 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட 9 மடங்கு அதிகமாக நடப்பு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பட்ஜெட் உரையில் இடம் பெற்ற மேலும் சில முக்கிய அம்சங்கள் வருமாறு:-
3 ஆண்டுகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி
நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள், நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்படும். போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. முதியோர்களுக்கான சேமிப்புத்தொகை போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். பழங்குடியின மக்களுக்கான வீடு குடிநீர், சாலை, தொலைத்தொடர்பு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதற்காக 3 ஆண்டுகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். இதுபோன்ற அறிவிப்புகள் அவரது உரையில் இடம்பெற்றிருந்தது.