அதானி விவகாரத்தால் தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்.. இன்றும் இரு அவைகளும் நாள் முழுக்க ஒத்திவைப்பு
பட்ஜெட் கூட்டத்தொடரின் 5ஆம் நாள் அமர்வு இன்று கூடியது
டெல்லி: அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பெர்க் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடியது. எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் தொடங்கிய சில நிமிடங்களில் இரு அவைகளும் முடங்கியது.
நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கி நடைபெறும். இந்தாண்டும் கடந்த வாரம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்றம் தொடங்கியது.
அன்றைய தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். 2023- 2024 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
மத்திய பட்ஜெட்
அதைத்தொடர்ந்து பிப்.1இல் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது.. குறிப்பாக புதிய வரி முறையில் இருப்போருக்கு 7 லட்ச ரூபாய் வரை வருமான வரி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பல முக்கிய விவகாரங்கள் அதில் இடம் பெற்றிருந்தது. மோடி தலைமையிலான பாஜக 2.0 அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் இதில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
விவாதம்
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை மத்திய அரசின் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளன.. இரு அமர்வுகளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இருப்பினும், கடந்த வாரம் நாடாளுமன்றம் முடங்கியது. அதானி குறித்து ஹிண்டர்ன்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள புகார்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே மட்டுமில்லாமல் நாடாளுமன்றத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அதானி அறிக்கை
கடந்த வாரம் நாடாளுமன்றம் கூடிய நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்க இருந்தது. இருப்பினும், அதானி குறித்து ஹிண்டர்ன்பெர்க் நிறுவனத்தின் அறிக்கைகளில் இருக்கும் புகார்களை விசாரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றம் கூடியது முதலே எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாகக் கடந்த வாரம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.
அவை முடக்கம்
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கூடிய போது, இரு அவையிலும் இந்த விவகாரத்தை பல்வேறு எதிர்க்கட்சிகள் எழுப்பின. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய நிலையில், இதனால் இரு அவைகளும் நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 5ஆம் நாள் அமர்வு இன்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது அதானி விவகாரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
நாள் முழுக்க ஒத்திவைப்பு
இதனால் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்ட நிலையில், இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றம் மீண்டும் 2 மணிக்கு கூடியது. அப்போதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அதானி விவகாரம் குறித்து அவைக்கு நடுவே வந்து முழக்கமிட்டு வந்தனர். இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது. நாளை காலை 11 மணிக்கு அவை கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.