பட்ஜெட் 2023.. ரெம்பவே எதிர்பார்த்த கிரிப்டோ முதலீட்டாளர்கள்.. கடைசியில் பெரிய ஏமாற்றம் தான்
மத்திய பட்ஜெட்டில் கிரிப்டோ கரன்சி குறித்த முக்கிய அறிவிப்பு இல்லை.
டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு விஷயங்கள் இடம்பெற்ற போதிலும், கிரிப்டோ கரேன்சி தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் இல்லை.
மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நேற்று பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வருமான வரி தொடங்கி விலைவாசி வரை பல்வேறு விவகாரங்களில் புதிய அறிவிப்புகள் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அத்தனை மக்களின் எதிர்பார்ப்பும் ஒன்றுதான்.. அடித்து கூறும் சர்வே! எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா பட்ஜெட்
கிரிப்டோ
இதில் பல இளைஞர்களின் கவனமும் கிரிப்டோகரன்சி மீதே இருந்து வருகிறது. பங்குச் சந்தையைப் போல கிரிப்டோகரன்சியில் வர்த்தகம் செய்து சம்பாதிக்கலாம் என்பது இவர்களின் எண்ணம். பணத்தைப் போல எதாவது ஒரு பொருளை வாங்க உருவாக்கப்பட்ட கிரிப்டோகரன்சிக்கள் இப்போது பெரும்பாலும் பங்குச்சந்தை போல வர்த்தகம் செய்யவே பயன்படுகிறது. மேலும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்திலும் கூட இந்த கிரிப்டோகரன்சிக்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உலக நாடுகளே இந்த கிரிப்டோகரன்சியை கண்டு அலறி வருகிறது.
மத்திய அரச
பல்வேறு நாடுகளும் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாகத் தடை கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்தியாவிலும் அதே நிலை தான். கிரிப்டோகரன்சிகள் மீதான இந்திய அரசின் கவலை அதிகரித்தே வருகிறது. ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்சிகளுக்கு முழு தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறது. இருப்பினும், மத்திய அரசு முழு தடை விதிக்காமல் கிரிப்டோகரன்சிகளுக்கு அதிகபட்ச தடை விதித்து மறைமுகமாகத் தடுக்கும் நடவடிக்கையில் தான் இறங்கியுள்ளது.
வரி
கடந்த பட்ஜெட்டில் கிரிப்டோ சொத்துக்களிலிருந்து பெறப்படும் மூலதன ஆதாயங்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது ஒருவர் வருமான வரியில் எந்த பிரிவில் இருந்தாலும் அவர்கள் கிரிப்டோ மூலம் சம்பாதிக்கும் லாபத்தில் 30% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், கிரிப்டோவில் ஏற்படும் நஷ்டத்தை மற்றொன்றில் கிடைக்கும் லாபத்தை வைத்து ஈடுசெய்ய முடியாது.. மேலும் எதிர்கால வருடங்களில் ஏற்படும் இழப்புகளை ஒத்திவைக்க முடியாது. இத்துடன் சேர்ந்து ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் 1% பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கோரிக்கை
இது கிரிப்டோ வர்த்தகத்தைப் பெருமளவு குறைத்துவிட்டது. நாட்டில் உள்ள கிரிப்டோ சந்தைகளில் நடக்கும் வர்த்தகம் இதன் பிறகு 97 சதவீதம் குறைந்துள்ளது. வர்த்தகம் குறைந்த போதிலும், இன்னுமே கூட நமது இளைஞர்கள் கிரிப்டோ மீது அதிக ஆர்வம் கொண்டே இருக்கிறார்கள். இன்னும் பல ஸ்டார்ட்அப்கள் கிரிப்டோவை அடிப்படையில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த தலைமுறையினர் ஆர்வம் மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கிரிப்டோ மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்பது கிரிப்டோ ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது.
குறைக்க வேண்டும்
வரி விகிதங்கள் குறைக்கப்பட்டால் கடந்த ஆண்டு வர்த்தகம் செய்வதில் இருந்து ஒதுங்கியவர்களும் கூட மீண்டும் கிரிப்டோ வர்த்தகத்திற்கு வருவார்கள். இதன் மூலம் அரசின் வரி வருவாய் அதிகரிக்கவே செய்யும். கடந்த ஆண்டு, கிரிப்டோ வர்த்தக பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 60 கோடி ரூபாய் டிடிஎஸ் ஆக வசூலிக்கப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு இன்னும் சற்று வரியைக் குறைத்தால்.. அதிகப்படியானோர் கிரிப்டோ வர்த்தகத்தில் இறங்குவார்கள். இது அரசுக்கான வருவாயை அதிகரிக்கவே செய்யும்.
ஏமாற்றம்
இருப்பினும், மற்றொரு தரப்பினர் கிரிப்டோவை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். அதில் எந்தவொரு உண்மையான மதிப்பும் இல்லாத நிலையில், இப்படி அதிகப்படியான பணம் அங்குச் செல்வது வீண் என்பது ஒரு தரப்பினர் கருத்து. மேலும், பயங்கரவாத நிதி, பண மோசடி உள்ளிட்டவற்றுக்கும் கிரிப்டோவுக்கும் அதிக தொடர்பு இருப்பதாலும் மக்கள் சந்தேகத்துடனேயே பார்க்கிறார்கள். இணைய உலகமே எதிர்பார்த்து இருந்தாலும் கூட இந்த பட்ஜெட்டில் கிரிப்டோ கரேன்சி தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் இல்லை. இதனால் கிரிப்டோ முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.