வன்முறை போராட்டங்களால் நாடு பலவீனமடைந்துவிடும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
டெல்லி: ஜனநாயகத்தில் கருத்துகளை பரிமாறி விவாதிக்கலாம்; ஆனால் வன்முறை போராட்டங்களால் நாடு பலவீனமடைந்துவிடும் என்று நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் நடப்பாண்டின் முதலாவது கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதலில் உரையாற்றினார்.
370-வது பிரிவு நீக்கம்
ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள்: குடியுரிமை சட்ட திருத்தத்தை நிறைவேற்றியிருப்பதன் மூலம் மகாத்மா காந்தியின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைவரும் இந்த சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தர வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு, 35-ஏ ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இது, ஜம்மு காஷ்மீர், லடாக் பிராந்தியத்தில் சமமான வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
மக்கள் நல திட்டங்கள்
8 கோடி மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2 கோடி மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 38 கோடி மக்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 50 கோடி மக்களுக்கு ரூ5 லட்சம் செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 24 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். 2.5 கோடி மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது. சுற்றுலா துறையில் இந்தியா 52-வது இடத்தில் இருந்து 34-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஜனநாயகத்தில் வெளிப்படையான விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் அவசியமானவை. ஆனால் எதிர்ப்புகள் என்ற பெயரால் நடத்தப்படும் வன்முறைகள், நாட்டையும் ஜனநாயகத்தையும் பலவீனப்படுத்தும். இவ்வாறு ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
நாளை பட்ஜெட்
இதனைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நாளை மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் முதலாவது முழு பட்ஜெட் இது. நாடு பெரும் பொருளாதார தேக்க நிலையை எதிர்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாளை தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 கட்டமாக கூட்டத் தொடர்
நடப்பு கூட்டத் தொடரானது இன்று முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரையில் முதல் கட்டமாக நடைபெறும். 2-வது பகுதி மார்ச் 2-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நடைபெறும். இக்கூட்டத் தொடரில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர். உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளன. மத்திய அரசும் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட 45 மசோதாக்களை இக்கூட்டத் தொடரில் நிறைவேற்றக் கூடும். முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருக்கிறோம். அதேபோல் பிற பிரச்சனைகளிலும் எதிர்க்கட்சிகளின் கருத்தை கேட்டு விவாதிக்கவும் அரசு தயாராக இருக்கிறது என்றார்.