ஃபிளாட் வாங்க போறீங்களா.. ஜனவரிக்கு பிறகு வாங்குங்க.. ஜிஎஸ்டியை குறைக்க உத்தேசமாம்!
Recommended Video
டெல்லி: ரியஸ் எஸ்டேட் மீதான வரியைக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் உத்தேசித்துள்ளது. எனவே ஜனவரிக்கு பிறகு ஃபிளாட்களின் விலை குறையும் என கூறப்படுகிறது.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 வகைகளில் வரி சதவீதத்தை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் கூடி விவாதித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் 31-ஆவது கூட்டம் நடைபெற்றது.
குறைப்பு
33 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்கவும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. இவற்றில் 7 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக குறைக்கவும், மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆக குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
உத்தேசம்
இந்த புதிய வரி விகிதம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது. அந்த வகையில் தற்போது ரியல் எஸ்டேட் துறை மீது 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் இதன் மீதான ஜிஎஸ்டி விலையை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் உத்தேசித்து வருகிறது.
வரியை செலுத்தும் போது
அதற்காக இரு உத்தேச திட்டங்களை வகுத்துள்ளது. ஒன்று ரியல் எஸ்டேட்டுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைப்பது. மூலப்பொருட்களை கொள்முதல் செய்தபோது செலுத்திய உள்ளீட்டு வரியை விற்பனை செய்ததற்கான வரியை செலுத்தும்போது உள்ளீட்டு வரி வரவை (Input Tax Credit) கழித்து நிகர வரியுடன் 12 சதவீதம் வரி செலுத்துவது ஆகும்.
ஆதாரம்
இன்னொன்று ரியல் எஸ்டேட் துறைக்கான ஜிஎஸ்டி வரியை உள்ளீட்டு வரி வரவையை கழிக்காமல் 5 சதவீதமாக குறைப்பது என்பதாகும். இந்த திட்டம் மூலம் வீடு கட்டும் நிறுவனங்கள் 80 சதவீதம் கட்டுமானப் பொருட்களை ஜிஎஸ்டி எண் பதிவு செய்துள்ள விநியோகஸ்தர்களிடம் வாங்கியதாக ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும்.
விலை குறையும்
வரும் ஜனவரி மாதம் மீண்டும் ஜிஎஸ்டி கவுன்சில் கூடுகிறது. அச்சமயம் இந்த இரு உத்தேச திட்டங்களும் விவாதிக்கப்பட்டு வரி குறைப்பு அறிவிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வீடு வாங்குவோர் ஜனவரிக்கு பிறகு வாங்கினால் விலை குறையும்.