கர்நாடகா இடைத்தேர்தல்: தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Recommended Video
டெல்லி: கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி கோரிய வழக்கில் அம்மாநில சபாநாயகர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடகாவில் முதல்வராக இருந்த குமாரசாமி அரசு மீது அதிருப்தி தெரிவித்து ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகளின் 17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து 17 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்தார்.
மேலும் 2023-ம் ஆண்டு வரை தகுதி நீக்கம் செய்யப்பட்டோர் தேர்தலில் போட்டியிட முடியாது என சபாநாயகர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவுக்கு எதிராக தகுதி நீக்கம் செய்யப்பட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள், தேர்தலில் தாங்கள் போட்டியிட அனுமதிக்க கோரி முறையிட்டனர்.
இதன் மீது இன்று நடைபெற்ற விசாரணையின் போது, எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு. அதேநேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டோரை தேர்தலில் போட்டியிடுவதில் தடுக்கவும் முடியாது. கர்நாடகாவில் இடைத்தேர்தல்களை நிறுத்த கூடாது என கூறியது.