சி.ஏ.ஏ போராட்டம்- டெல்லி வன்முறைகள்- பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு
டெல்லி: சி.ஏ.ஏ. ஆதரவு என்ற பெயரில் வன்முறை கும்பல் நடத்திய கோரத்தாண்டவத்தில் வடகிழக்கு டெல்லியில் பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ. க்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் போராட்டம் என்கிற பெயரில் வன்முறைகளில் ஈடுபட்டனர்.
வடகிழக்கு டெல்லியின் பல இடங்களில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. இதனால் வடகிழக்கு டெல்லி முழுவதும் போர்க்களமானது.
நாட்டையே பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்தது வடகிழக்கு டெல்லி வன்முறைகள். இச்சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. டெல்லி ஜிடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 38 பேர் பலியாகினர்.
அதேபோல் லோக் நாயக் மருத்துவமனையில் 3 பேரும், ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் 4 பேரும் ஜேபிசி மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறை சம்பவங்களை தூண்டிவிட்ட பாஜக தலைவர்கள் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது உடனே வழக்கு பதிவு செய்ய நீதிபதி முரளிதர் உத்தரவிட்டார். இதனால் அவர் இரவோடு இரவாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
பின்னர் இவ்வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரித்தார். அப்போது போலீஸ் தரப்பில், பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய இது சரியான நேரம் அல்ல என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.