உ.பி.யில் பல மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு- டெல்லி உ.பி பவன் அருகே 144 தடை உத்தரவு
லக்னோ/டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கிய உத்தரப்பிரதேச அரசை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெறுவதால் அம்மாநிலத்தில் பல மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக வெடித்தன. பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடைபெற்று உயிரிழப்புகள் ஏற்பட்டன.
ஆனால் உத்தரப்பிரதேச அரசு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. மேலும் போராட்டக்காரர்களே வன்முறையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி வருகிறது.
இதனால் உத்தரப்பிரதேச அரசின் போக்கைக் கண்டித்தும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் இணைய சேவைகளை மாநில அரசு துண்டித்துள்ளது.
அத்துடன் டெல்லியில் உள்ள உத்தரப்பிரதேச பவனும் தற்போது போராட்ட களமாகி உள்ளது. உத்தரப்பிரதேச அரசின் கடும் போக்கை கண்டித்து நேற்று நூற்றுக்கணக்கானோர் உ.பி. பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
இன்றும் உ.பி. பவனை டெல்லி ஜாமியா மாணவர்கள் முற்றுகையிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து டெல்லி உ.பி. பவன் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.