குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்... இந்தியாவுக்கான சுற்றுலா பயணிகள் வருகை 60% சரிவு!
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான தொடர் போராட்டங்களால் இந்தியாவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சுமார் 60% சரிந்துள்ளது அத்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் முதலில் போராட்டங்கள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் நாள்தோறும் போராட்டங்கள் தொடருகின்றன.
இப்போராட்டங்களால் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள், இந்தியாவுக்கு தங்களது நாட்டவர் பயணம் மேற்கொள்வது குறித்த பயண எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்தன. உ.பி.யில் மட்டும் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியாகினர்.
சுற்றுலா பயணிகள்
இத்தகைய அசாதாரண சூழ்நிலையால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் மோசமான அளவில் குறைந்துள்ளது. வெளிநாடுகளில் டிசம்பர் மாதம் விடுமுறை மாதம் என்பதால் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணிப்போர் எண்ணிக்கை அதிகம்.
அஸ்ஸாம் மோசமான பாதிப்பு
அஸ்ஸாமில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் சுமார் 5 லட்சம் வெளிநாட்டு பயணிகள் வருகை தருவர். ஆனால் இம்முறை வெளிநாட்டு பயணிகளின் வருகையானது 90% சரிவை சந்தித்துள்ளது.
கோவாவுக்கும் பாதிப்பு
வெளிநாட்டவர் இந்தியாவில் தேர்வு செய்யும் முக்கிய நகரம் கோவா. இத்தனைக்கும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக கோவாவில் போராட்டங்கள் நடைபெறவில்லை. ஆனாலும் சுற்றுலா பயணிகளின் வருகை 50% சரிந்துள்ளது.
தாஜ்மஹால் நிலவரம்
குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு போராட்டங்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் உத்தரப்பிரதேசம்தான். ஆண்டுக்கு பல கோடி பேர் வருகை தரும் ஆக்ராவின் தாஜ்மஹால் இம்முறை ஏறத்தாழ வெறிச்சோடி கிடக்கிறது என்கிற நிலைமைதான்.
2 வாரங்களில் 2 லட்சம் பேர் ரத்து
தாஜ்மஹாலை பார்வையிட திட்டமிட்டிருந்த சுமார் 2 லட்சம் பேர் கடந்த 2 வாரங்களில் தங்களது பயணங்களை ரத்து செய்திருக்கின்றனர். சி.ஏ.ஏ. போராட்டங்களால் இணைய இணைப்புகளை மாநில அரசு துண்டித்ததன் மூலமும் ஆக்ராவில் 50% முதல் 60% வரை சுற்றுலா துறை பாதிப்பை சந்தித்துள்ளது.
ஒப்பீட்டளவில் குறைவு
ஆக்ராவில் சுற்றுலா துறை அலுவலகத்தை தொடர்பு கொள்வோர் முதலில் கேட்பதே பாதுகாப்பு நிலைமை எப்படி உள்ளது என்பதுதானாம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் தாஜ்மஹாலில் சுற்றுலா பயணிகள் வருகை 60% குறைந்துள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.