சிஏஏ ஆதரவாளர்கள்.. எதிர்ப்பாளர்கள் இடையே வெடித்தது மோதல்.. டெல்லியில் உச்சகட்ட பதற்றம்
டெல்லி: சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் குடிமக்களின் தேசிய பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றிற்கு எதிராக நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டெல்லியின் ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் ஷாஹீன்பாக்கை தொடர்ந்து ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தின் முன்பும் ஏராளமான பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சீலம்பூரைம் மௌச்பூர் மற்றும் யமுனா விஹார் இணைக்கும் ஜாஃப்ராபாத் மெட்ரோ பாதைக்கு கீழே உள்ள சாலையை 800 க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்துள்ளனர்.
பெண்கள் தேசிய கொடியை சுமந்துகொண்டு கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்., குடியுரிமை (திருத்த) சட்டத்தை (சிஏஏ) மையம் ரத்து செய்யும் வரை நாங்கள் இந்த இடத்திலிருந்து செல்லமாட்டோம் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
பீம் ஆர்மி சந்திரசேகர்
"இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை. பதவி உயர்வுகளில் தனக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை எந்தத் தனிநபரும் அடிப்படை உரிமையாகக் கோர முடியாது. இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என எந்த ஒரு கட்டளையையும் நீதிமன்றங்கள் மாநில அரசுகளுக்குப் பிறப்பிக்க முடியாது" என உச்ச நீதிமன்றம் இந்த மாத தொடக்கத்தில் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து இம்மாத தொடக்கத்தில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்திற்கு இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஆதரவு தெரிவித்தனர்.
கண்ணீர்புகை குண்டு
இதற்கிடையே பெண்கள் போராட்டம் நடத்தி வரும் ஜாஃப்ராபாத்திற்கு அருகே ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளி மௌஜ்பூரில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி போராட்டக்கார்களை கலைத்தனர். அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. இப்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.
ரயில்நிலையம்
ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி)ஜாஃப்ராபாத் நிலையத்தின் நுழைவு வழி மற்றும் வெளியேறும் வழி மூடப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்படாது என்றும் அறிவித்துள்ளது. மௌஞ்பூரில் சாலைகளை போலீஸ் மூடியுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த இந்த முடிவை போலீஸ் எடுத்துள்ளது.
டெல்லியில் பதற்றம்
இது ஒரு புறம் எனில் அலிகரிலும் பெண்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அலிகரில் உள்ள ஒரு பகுதியில் கடந்த 24 நாட்களாக சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது. சனிக்கிழமையன்று, அலிகரில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்திற்கு அருகே போராட கூடாரம் அமைக்க பெண்கள் அனுமதி கோரினார்கள்.இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அனுமதி பெற வந்த பெண்கள், காவல் நிலையத்திற்கு வெளியே ஒரு தர்ணாவில் அமர்ந்தனர். பின்னர் போலீசார் அந்த இடத்திலிருந்து பெண்களை அகற்ற முயன்றனர், இது மோதலுக்கு வழிவகுத்தது. இதனால் போலீஸ் மற்றும் போராட்டக்கார்கள் இடையே மோதல் வெடித்தது. இதனால் அங்கும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.