ஊரே பற்றி எரிகிறது.. டெல்லியில்தான் இருக்கிறார் ட்ரம்ப்.. சிஏஏ பற்றி வாயே திறக்கலையாம்
டெல்லி: CAA சட்டம் தொடர்பாக, பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசனை நடத்தவில்லை என்று, வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்த்தன் ஸ்ரீங்கலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லியில் இன்று இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார், ஹர்ஷ் வர்த்தன். அப்போது அவர் கூறியதை பாருங்கள்:
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே, பாதுகாப்பு, மின்சாரம், தொழில்நுட்பம், ராணுவம் மற்றும் மக்களிடையேயான இணைப்பு ஆகிய 5 முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
சிஏஏ விவகாரம், மோடி-ட்ரம்ப் ஆலோசனையின்போது விவாதிக்கப்படவில்லை. மத சுதந்திரத்தைப் பொறுத்தவரை, இரு நாடுகளிலும் பன்மைத்துவம் மற்றும் பன்முகத்தன்மை ஒரு பொதுவான பிணைப்பு விஷயமாக இருப்பதை இரு தரப்பும், சுட்டிக் காட்டின.
எல்லை தாண்டிய பயங்கரவாதம், போதைப்பொருள், பயங்கரவாதம் தொடர்பான நிதி தொடர்பான பிரச்சினைகள் ஆலோசிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரில் ஏராளமான சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அமெரிக்க அதிபருடன் பகிர்ந்து கொண்டோம். இந்திய அரசின் கவனம் இப்போது வளர்ச்சியில் உள்ளது.
அமெரிக்க அதிபர் வருகையால், இரு நாடுகளிடையேயான கூட்டுறவு, நட்பு பெரிதும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது நமது ஒத்துழைப்புகளை பலப்படுத்தியுள்ளது. புதிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.
ட்ரம்ப் நேற்று இரவு முதல் இன்று இரவு வரை தங்கியுள்ள டெல்லியில்தான் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக பெரும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன. இதுவரை, சுமார் 9 பேர் இந்த கலவரங்களில் பலியாகியுள்ளனர். இந்த நிலையிலும், ட்ரம்ப் அதுகுறித்து மோடியிடம் ஆலோசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.