இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடு ... மத்திய அமைச்சரவை சூப்பரோ சூப்பர்!!
டெல்லி: மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமரின் லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் நடந்தது. கொரோனாவை எதிர்கொண்டு வரும் இக்கட்டான சூழலில் மத்திய அரசு பல்வேறு மக்கள் சார்ந்த திட்டங்களை அறிவித்து வருகிறது. 107 நகரங்களில் 1,08,000 வீடுகள் இடம் பெயர் தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விடுவதற்கு காட்டப்படும் என்று மத்திய அமைச்சரவை இன்று அறிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு பொது முடக்கத்தில் உள்ளது. இதனால், மக்கள் தங்களது வேலை வாய்ப்பை இழந்து, இடம் பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க மத்திய அரசு பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.
வரும் நவம்பர் மாதம் வரை ரேஷனில் இலவச அரிசி, கோதுமை, பருப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடக்கும் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இபிஎப்:
இந்தக் கூட்டத்தில் தொழிலாளர்களின் 3 மாதங்களுக்கான 24% பிஎப் தொகையை ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசே செலுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது (நிறுவனங்களின் 12%; தொழிலாளர்களின் 12% பங்கு) பி.எப். தொகையை அரசு செலுத்துவதால் 72 லட்சம் பேர் பயனடைவர் என்றும், இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ 4,860 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இதிலும் சில கட்டுப்பாடுகளை அமைச்சரவை விதித்துள்ளது. ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 90% பேரின் மாத ஊதியம் ரூ .15,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும். அந்த நிறுவனத்தில் 100 ஊழியர்கள் வரை மட்டுமே பணியாற்ற வேண்டும் . இதுபோன்ற நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிஎப் தொகையை மத்திய அரசு செலுத்தும் என்று அமைச்சரை தெரிவித்துள்ளது.
வருங்கால வைப்பு நிதி திட்டம்.. பிஎப் தொகையை மத்திய அரசே மேலும் 3 மாதத்திற்கு செலுத்தும்.. அதிரடி!
மேலும் நவம்பர் மாதம் வரை இலவசமாக அரிசி, கோதுமை, பருப்பு வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இன்சூரன்ஸ்:
மத்திய அரசின் மூன்று முக்கிய இன்சூரன்ஸ் நிறுவனங்களான ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆகியவற்றுக்கு மூலதன முதலீடாக ரூ. 12,450 கோடியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குறைந்த வாடகையில் வீடுகள்:
இடம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்காக நகர்ப்புறங்களில் குறைந்த வாடகையில் அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 107 நகரங்களில் 1,08,000 வீடுகள் இடம் பெயர் தொழிலாளர்களுக்கு வாடகைக்கு வழங்கப்படும். இடம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்காக நகர்ப்புறங்களில் குறைந்த வாடகையில் அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலவச சிலிண்டர்:
மத்திய அரசின் 3 இலவச சிலிண்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 7.4 கோடி ஏழை பெண்கள் பயனடைவர்: இத்திட்டத்துக்காக மத்திய அரசு ரூ13,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.