சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைகள்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
டெல்லி: 2 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இன்று பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார் . பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின் இன்று அமைச்சரவை கூட்டம் நடத்தினார். கொரோனா பாதிப்பு, பொருளாதார சரிவுக்கு இடையே அமைச்சரவை கூட்டம் நடந்தது.
அதேபோல் லடாக் எல்லையில் சீனாவின் அத்து மீறல், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது . முக்கியமாக பொருளாதார சரிவு குறித்து இதில் முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டது.
மத்திய அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். சிறு, குறு தொழில் குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைகள் வழங்கப்படும். சிறிய சிறிய நிறுவனங்களுக்கு மட்டும் இந்த சலுகை அல்ல. பெரிய நிறுவனங்களுக்கும் இது சலுகை வழங்கப்படும். ரூ.50 கோடி வரை முதலீடு உள்ள நிறுவனங்களுக்கும் சிறு தொழில்களுக்கான சலுகை வழங்கப்படும்.
2 லட்சம் சிறுகுறு, நடுத்தர நிறுவனங்கள் இதனால் பயன் அடையும். குறு நிறுவனங்களின் நிதி வரையறை 25 லட்சத்தில் இருந்து 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது போக மத்திய அமைச்சரவை முடிவுகள் மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் ரூ.50,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டு வருகிறோம்.