'பொருளாதாரத்தில் பின்தங்கிய' உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு: மத்திய அரசு தடாலடி முடிவு
டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
ஜாதி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியே காப்பாற்றும் நடைமுறை நாடு முழுக்க உள்ளது. அதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகும்.
ஆனால், உயர்ஜாதி பிரிவில் உள்ளவர்கள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று, நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருவாய், மற்றும் 5 ஏக்கருக்கு கீழ் நிலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த உயர்ஜாதி வகுப்பினரை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
மேலும், இதற்காக, அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரை மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு செய்து, அதில் அமைச்சரவை முடிவுக்கு, ஏற்றாற்போல அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும்நிலையில், பாஜக தனது வாக்கு வங்கியான, உயர் ஜாதியினரை குளிர்விக்க இதுபோல ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.