ககன்யான் திட்டத்துக்குப் பச்சைக் கொடி.. விண்ணுக்கு செல்லும் இந்தியர்கள்.. இஸ்ரோவின் மாஸ் திட்டம்!
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் பிரம்மாண்ட திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் பிரம்மாண்ட திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்து இருக்கிறது. அதேபோல் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் விண்ணுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது இஸ்ரோவும் விண்ணுக்கு மனிதர்களை அனுப்ப முடிவெடுத்து உள்ளது. இஸ்ரோவின் இந்த திட்டத்திற்கு ககன்யான் திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ககன்யான் திட்டம்
இந்த ககன்யான் திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த திட்டம் மூலம் என்ன ஆராய்ச்சி நடத்தப்படும், விண்ணில் எங்கு சென்று ஆராய்ச்சி செய்வார்கள் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் இதன் மூலம் இந்தியா முதன்முதலாக மனிதர்களை சுயமாக விண்ணுக்கு அனுப்ப உள்ளது.
3 பேர்
இந்த திட்டத்தின் மூலம் 3 பேரை விண்ணுக்கு அனுப்ப மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் 3 பேர் ஏழு நாட்கள் விண்ணில் இருப்பார்கள். ஏழு நாட்கள் அவர்கள் விண்ணில் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள். யாரை விண்ணுக்கு அனுப்ப போகிறார்கள் என்பதை குறித்தும் இவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.
எப்போது எவ்வளவு
இஸ்ரோவின் இந்த திட்டத்திற்கு 10 கோடி ரூபாயை மத்திய அரசு இதற்காக ஒதுக்கியுள்ளது. 2020க்குள் இந்த திட்டம் முடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
திரும்பி வருவார்கள்
இதற்காக இரண்டு கட்ட சோதனைகளை செய்ய இஸ்ரோ முடிவெடுத்து இருக்கிறது. முதற்கட்டமாக ஆள் இல்லாத ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து சோதனை செய்ய போகிறார்கள். அதன்பின்பே மனிதர்களை அனுப்ப இருக்கிறார்கள். ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் இவர்கள் விண்ணிற்கு அனுப்பப்பட உள்ளனர்.
சூப்பர்
இதற்காக விண்வெளியில் இருந்து மனிதர்களை பூமிக்கு கொண்டு வர உதவும் கேப்ஸ்யூல் வசதியை இந்தியாவின் இஸ்ரோ ஏற்கனவே டெஸ்ட் செய்து முடித்துள்ளது. இந்த கேப்ஸ்யூலுக்கு பெயர் வைக்கப்படவில்லை. இது முழுக்க ,முழுக்க இஸ்ரோவின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கேப்ஸ்யூல் ஆகும். இதை தற்போது வெற்றிகரமாக சோதனை செய்தும் முடித்து இருக்கிறார்கள்.