விடாத மோடி அரசு.. மீண்டும் வருகிறது முத்தலாக் தடை சட்டம்.. அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: நாடாளுமன்றத்தில் புதிதாக முத்தலாக் தடை மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தில், மனைவியை பார்த்து மூன்று முறை கணவன் தலாக் சொன்னால் விவாகரத்து செய்துவிடலாம் என்ற நடைமுறை பரவலாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், முத்தலாக்கிற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, முத்தலாக்கிற்கு சட்டப்பூர்வமாக தடை விதிக்கும் நோக்கத்தில், கடந்த மோடி ஆட்சியில், 'முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு)' என்ற மசோதா, லோக்சபாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, ராஜ்யசபாவில், இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. மசோதாவில் திருத்தம் செய்தும் கூட நிறைவேற்ற முடியவில்லை. எனவே 2 முறை அவசர சட்டங்களை பிறப்பித்து சட்டத்தை நடைமுறைப்படுத்தியது அரசு.
இப்போது 17வது லோக்சபா பொறுப்பேற்றுள்ளது. எனவே, கடந்த அரசால் கொண்டுவரப்பட்டு நிலுவையில் உள்ள முத்தலாக் மசோதா காலாவதியாகிவிட்டது. புதிதாக முத்தலாக் மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றி பிறகு ராஜ்யசபாவிலும் நிறைவேற்ற வேண்டியது கட்டாயம்.
மோடி அரசு கொண்டு வந்த முத்தலாக் தடை சட்டத்தின் படி முத்தலாக் கூறும் கணவருக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க முடியும்.. முத்த லாக் கூறி விவகாரத்து செய்வது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம். இருந்தாலும், விசாரணை துவங்கும்முன், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆண், மாஜிஸ்திரேட்டை அணுகி, ஜாமீன் கோரமுடியும்.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், முத்தலாக் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி தொடங்க உள்ள, நாடாளுமன்ற, கூட்டத்தொடரிலேயே முத்தலாக் தடை மசாதோ தாக்கல் செய்யப்பட உள்ளது.