இறுதிகட்ட லோக்சபா தேர்தல், 4 தொகுதி சட்டசபை இடைத் தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்தன.. 19ல் வாக்குப்பதிவு
இறுதிக்கட்ட நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
டெல்லி: 7வது மற்றும் இறுதிக் கட்ட லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது.
7 கட்டமாக திட்டமிடப்பட்ட லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டத்தில் இருந்தே பிரச்சாரம் தீவிரமாக நடந்தது.
இரண்டாம் கட்ட தேர்தலின் போது தமிழகத்திலும் 18 சட்டசபை மற்றும் 38 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்தது. அடுத்தடுத்து மொத்தமாக 6 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. இதுவரை 484 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது.
இந்த நிலையில் 7வது மற்றும் இறுதி கட்டமாக 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் மக்களவை தேர்தல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிவடைந்தது. இந்த வாக்குப் பதிவுடன் தமிழகத்தில் 4 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இன்று மாலை 5 மணியோடு நாடு முழுக்க இந்த பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. நாடு முழுவதும் வேலூர் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் நடந்த கலவரம் காரணமாக அங்கு நேற்றே பிரச்சாரம் முடித்துவைக்கப்பட்டுவிட்டது. மற்ற மாநிலங்களில் இன்று முடிவடைந்தது.
இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத், பிரியங்கா காந்தி ஆகியோர் கடைசி கட்ட பிரச்சாரம் செய்தனர். பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார். இந்த தேர்தலில் அதிக பிரச்சார கூட்டங்களை நடத்தியவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
அவர் 115க்கும் அதிகமான பிரச்சார கூட்டங்களை நடத்தி உள்ளார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 100+பிரச்சார கூட்டங்களை நடத்தி உள்ளார். இறுதிக் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்ததும், மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.