41 மணி நேரம் விமானத்தில் வர முடியாது.. போங்க.. நீதிமன்றத்திற்கு மெகுல் சோக்சி எழுதிய பகீர் கடிதம்!
41 மணி நேரம் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் இந்தியா வர முடியாது என்று கடன் மோசடி வழக்கில் சிக்கி இருக்கும் மெகுல் சோக்சி கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி: 41 மணி நேரம் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் இந்தியா வர முடியாது என்று கடன் மோசடி வழக்கில் சிக்கி இருக்கும் மெகுல் சோக்சி கடிதம் எழுதியுள்ளார். அவரின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ13,000 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு இடங்களில் பல்வேறு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மெகுல் சோக்சி எழுதிய கடிதம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யார் இவர்?
நீரவ் மோடியின் கீதாஞ்சலி வைர நிறுவனம்தான் இந்த மோசடி வழக்கில் சிக்கி இருப்பது. இதன் சேர்மேனாக இருந்தவர்தான் மெகுல் சோக்சி. கடன் வாங்கியதிலும், பஞ்சாப் வங்கியை ஏமாற்றியதிலும் இவருக்கு முக்கிய பங்குள்ளதாக கூறப்படுகிறது . இவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சம்
இந்த நிலையில் மெகுல் சோக்சி தற்போது மேற்கு இந்தியா தீவுகளில் உள்ள ஒரு தீவான ஆண்டிகுவாவில் வசித்து வருகிறார். மருத்துவ காரணம் என்று சொல்லி அங்கு தஞ்சம் கேட்டவர் தற்போது அங்கு குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இவர் தற்போது, பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கை விசாரிக்கும் டெல்லி நிதி மோசடி தடுப்பு நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
வர முடியாது
அவர் தனது கடிதத்தில் ''என்னால் விசாரணைக்காக இந்தியா வர முடியாது. எனக்கு உடல் நிலை சரியில்லை. இங்கிருந்து இந்தியா வர விமானத்தில் 41 மணி நேரம் ஆகும். அவ்வளவு நேரம் பயணித்து என்னால் இந்தியா வந்து விசாரணையில் ஆஜராக முடியாது.'' என்று கூறியுள்ளார்.
பெரும் ஆணவம்
அதேபோல், இந்த வழக்கை அமலாக்கத்துறை வேண்டும் என்றே மெதுவாக விசாரிக்கிறது. வழக்கில் உண்மை வெளியே வர கூடாது என்று மெதுவாக விசாரிக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் வங்கியில் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருகிறேன், என்று கூறியுள்ளார்.