வருமானம் இல்லை.. அனைத்து கொரோனா உயிரிழப்புகளுக்கும் நஷ்டஈடு வழங்க முடியாது.. மத்திய அரசு திட்டவட்டம்
டெல்லி: பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு மட்டுமே நஷ்டஈடு வழங்க முடியும் என்பதாலும் மாநிலங்களின் வரி வருவாய் குறைந்துள்ளதாலும் கொரோனா உயிரிழப்பு அனைத்திற்கும் நஷ்டஈடு வழங்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது.இதுவரை நாட்டில் 3.85 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நான்கு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மத்திய அரசு நேற்றிரவு பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்தது.
மத்திய அரசு
183 பக்கங்களைக் கொண்ட அந்த பிரமாண பத்திரத்தில் கொரோனாவால் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கொரோனா பாதிப்பால் இதுவரை நாட்டில் 3.85 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கலாம்.
நஷ்டஈடு கொடுக்க முடியாது
ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள மாநிலங்களால் உயிரிழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் நஷ்டஈடு கொடுக்க முடியாது. பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும் எனப் பேரிடர் மேலாண்மை சட்டம் கூறுகிறது. கொரோனா பாதிப்பை இச்சட்டத்தின் கீழ் கொண்டு வருவது பொருத்தமானதாக இருக்காது.
வருவாய் குறைவு
அதிகரித்துள்ள சுகாதார செலவினங்கள், குறைந்துள்ள மாநில வரி வருவாய் ஆகியவை காரணமாக மாநில அரசுகளால் அனைத்து கொரோனா உயிரிழப்புகளுக்கும் நஷ்டஈடு வழங்க முடியாது. தற்போது இருக்கும் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி நஷ்டஈடு வழங்கினாலும், அது தேவையற்ற எதிர்வினைகளை ஏற்படுத்தலாம். எனவே நஷ்டஈடு வழங்குவது நன்மையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம்,
தலையிடக் கூடாது
மேலும் இது அரசு கொள்கை ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு என்றும் எனவே இதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்பதைக் கடந்த காலங்களில் பல தீர்ப்புகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உயிரிழப்பு சான்றிதழ்களில் கோவிட் உயிரிழப்பு என்றே குறிப்பிட வேண்டும். இதைப் பின்பற்றாத மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,419 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.98 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,576 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்புகளும் 3.86 லட்சமாக உயர்ந்துள்ளது.