நீங்கள் ஆட்சியில் இல்லை.. ஸ்பெஷல் பாதுகாப்பு தர முடியாது.. சோனியா குடும்பத்திற்கு அமித் ஷா பதில்!
காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியில் இல்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும், அதனால் அவர்களுக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு எல்லாம் கொடுக்க முடியாது என்று அமித் ஷா பேசி உள்ளார்.
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியில் இல்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும், அதனால் அவர்களுக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு எல்லாம் கொடுக்க முடியாது என்று எஸ்பிஜி பாதுகாப்பு சட்டதிருத்த மசோதா விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உட்பட அவரின் குடும்பத்திற்கு எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ்பிஜி பாதுகாப்பு படையினர் பிரதமர் மற்றும் நாட்டின் முன்னாள் பிரதமர்களுக்கு பாதுகாப்பை வழங்கி வந்தனர்.
விரிவான ஆய்வுக்கு பிறகு இந்த சிறப்பு பாதுகாப்பை விலக்குவதாக அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் தற்போது எஸ்பிஜி பாதுகாப்பு படையினர் சோனியா காந்தி குடும்பத்தின் பாதுகாப்பில் இருந்து நீக்கப்பட்டது லோக்சபாவில் எதிரொலித்துள்ளது.
இந்த தொடர் பிரச்சனை காரணமாக பிரதமருக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு திருத்த மசோதாவை (எஸ்பிஜி) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இதன் மூலம் இனிமேல் எஸ்பிஜி பிரதமருக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கும், முன்னாள் பிரதமர்களின் குடும்பத்திற்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படாது.
இந்த மசோதாவை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று லோக்சபாவில் பேசினார். அதில், பாஜக முதலில் யாரையும் பழி வாங்கும் முடிவோடு செயல்படவில்லை. எது சரியானதாக இருக்கும் என்று தெரிந்துதான் நாங்கள் செயல்படுகிறோம். காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியில் இல்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் அதிகாரத்தில் இல்லை. மக்களின் தீர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால் அவர்களுக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு எல்லாம் கொடுக்க முடியாது. அது இனிமேல் பிரதமருக்கு மட்டுமே வழங்கப்படும். அதேபோல் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அந்த பாதுகாப்பு வழங்கப்படும்.
இதற்கு முன் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கப்பட்டது, வாஜ்பாய், தேவகவுடா குடும்பத்திற்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கப்பட்டது. அவர்கள் எல்லாம் இதை எதிர்க்கவில்லை. ஆனால் சோனியா காந்தி குடும்பம் மட்டும் எப்போதும் இதை எதிர்க்கிறது.
அவர்களுக்கு பாதுகாப்பு நீக்கப்பட்ட பின் இசட் + பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சோனியா காந்தி குடும்பத்தினர் பலமுறை திடீர் என்று எஸ்பிஜி பாதுகாப்பு அதிகாரிகளை பணி செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு எங்காவது சென்றுவிடுகிறார்கள். 600 முறைக்கு மேல் இப்படி நடந்துள்ளது. அப்படி என்றால் அவர்கள் எதோ ரகசியத்தை மறைக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
அவர்கள்தான் பாதுகாப்பை அடிக்கடி புறந்தள்ளி இருக்கிறார்கள். அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லாம் எங்கு சென்றாலும் பாதுகாப்போடு செல்கிறார். அவர் கழிவறைக்கு சென்றால் கூட கதவு வரை பாதுகாவலர்கள் சென்று அவரை விட்டுவிட்டு வருகிறார்கள்.
எஸ்பிஜி இனிமேல் பிரதமருக்கு மட்டுமே அளிக்கப்படும். இதனால் சட்டத்தில் மாற்றமும் கொண்டு வரப்பட்டுள்ளது.இதை ஸ்பெஷல் என்று அழைப்பதற்கு காரணமே அதுதான் என்றும் அமித் ஷா தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார். அமித் ஷாவின் பேச்சை அடுத்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.