1984 கலவரம்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த டெல்லி.. ஹைகோர்ட் எச்சரித்த பின்னணி
டெல்லி: 1984ம் ஆண்டு வன்முறை சம்பவம் போல, மீண்டும் டெல்லியில் நடக்க கூடாது. ஒவ்வொரு டெல்லி குடிமகனுக்கும், இசெட் பாதுகாப்பு ரீதியில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டது. டெல்லி கலவரம் தொடர்பான பொது நல வழக்கை இன்று விசாரித்த ஹைகோர்ட் இவ்வாறு தெரிவித்துள்ளது.
Recommended Video
கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழி செய்ய வேண்டும், கலவரத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தார், இறுதிச் சடங்குகள் செய்வதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், கலவரம் குறித்து தகவல் தெரிவிக்க பிரத்யேக டோல்ஃப்ரீ எண் அறிமுகம் செய்வது குறித்து யோசிக்க வேண்டும் என ஹைகோர்ட் கூறியுள்ளது.
மேலும், போர்வை, மருந்துகள், உணவு மற்றும் கழிவறை வசதியுடன் கூடிய, பாதுகாப்பு முகாம்களை ஏற்படுத்தி, கலவரத்தால் பாதிக்கப்படுவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சிபிஎஸ்இ, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்துவதா, இல்லையா என்பது குறித்து, இன்று மாலை 5 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1984ம் ஆண்டு கலவரம் என்றால் என்ன?
1984 கலவரம் என்பது, சீக்கிய படுகொலை கலவரம் என்றும் அழைக்கப்படுகிறது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அவரது மெய்க்காப்பாளர்கள் சுட்டு கொன்றனர். அவர்கள் சீக்கியர்கள். இதனால் கோபமடைந்த காங்கிரஸ் ஆதரவாளர்கள், மற்றும் அப்போதைய காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், சீக்கியர்களை குறி வைத்து வேட்டையாடினர்.
பாதிப்பு அதிகம்
டெல்லியில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. டெல்லி உட்பட நாடு முழுவதும் 3,350 பேர் கொல்லப்பட்டனர் என்று அரசு புள்ளி விவரமே ஒப்புக் கொண்டது. ஆனால், கொலையானோர் எண்ணிக்கை சுமார் 8,000 ஆயிரம் முதல் 17,000 வரை இருக்க கூடும் என்கிறது சில தகவல்கள். சீக்கிய அமைப்புகளும், அப்படித்தான் சொல்கின்றன.
இந்திரா காந்தி கொல்லப்பட்டது ஏன்?
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் 1984 ஜூன் 1 முதல் 8 வரை அமிர்தசரஸ் நகரிலுள்ள சீக்கியர்களின் புனிதஸ்தலமான பொற்கோவிலில், இந்திரா காந்தி ராணுவ நடவடிக்கை எடுத்தார். பொற்கோவிலுக்குள் இருந்தபடி தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட, சீக்கிய தீவிரவாதியான ஜர்னைல் சிங் பிந்த்ரான்வாலே மற்றும் அவரது கூட்டாளிகளை ஒடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களை ராணுவம் கொன்று குவித்தது. கோவில் ரத்தக் களரியானது.
மதம் மீது தாக்குதல்
கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கை, உலகளவில் சீக்கியர்களால் விமர்சிக்கப்பட்டது, அவர்கள் சீக்கிய மதத்தின் மீதான தாக்குதல் என்று இதை கருதினர். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, 1984, அக்டோபர் 31 அன்று, இந்திரா காந்தி அவரது இரண்டு சீக்கிய மெய்க்காப்பாளர்களான சத்வந்த் சிங் மற்றும் பீந்த் சிங் ஆகியோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 33 ரவுண்டுகள் இந்திரா காந்தியை இவர்கள் சரமாரியாக சுட்டு வீழ்த்தினர்.
வெளியேற்றம்
இதையடுத்துதான், சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. கலவரத்திற்கு பின்னர், 20,000 பேராவது டெல்லி நகரத்தை விட்டு வெளியேறியதாக அரசு புள்ளி விவரம் தெரிவித்தது. இதன்பிறகு, இப்போது தலைநகர் மீண்டும் கொளுந்துவிட்டு எரிகிறது. இப்போது சிஏஏ சட்டத்தை ஆதரிப்போர், அதாவது வலதுசாரிகள், எதிர்ப்போர்-பெரும்பாலும் முஸ்லீம்கள்- இடையே மோதல் உருவாகியுள்ளது. இதில் முஸ்லீம்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியவண்ணம் இருக்கிறது. எனவேதான், 1984ம் ஆண்டு கலவரத்தை மேற்கோள் காட்டி அரசை விளாசியுள்ளது, டெல்லி உயர் நீதிமன்றம்.