ராமர் அயோத்தியில் பிறந்தார் என நிரூபிக்க முடியாது.. அது நம்பிக்கை.. அயோத்தி வழக்கில் பரபர வாதம்!
இந்து கடவுள் ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பதை நிரூபிக்க முடியாது, அது ஒரு நம்பிக்கை என்று அயோத்தி வழக்கில் ராம் லல்லா அமைப்பு வாதம் செய்துள்ளது.
டெல்லி: இந்து கடவுள் ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பதை நிரூபிக்க முடியாது, அது ஒரு நம்பிக்கை என்று அயோத்தி வழக்கில் ராம் லல்லா அமைப்பு வாதம் செய்துள்ளது.
1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். இன்று மூன்றாவது நாளாக இதில் விசாரணை நடந்தது.
என்ன பேசினார்கள்
இதில் இந்து அமைப்பான ராம் லல்லா அமைப்பு சார்பாக வழக்கறிஞர் கே பராசரன் வாதம் செய்தார். அதில், அயோத்தி என்பது ராமர் பிறந்த இடம். அங்கு ராமர் வாழ்ந்தார். அங்குதான் தவறுதலாக பாபர் மசூதி கட்டப்பட்டது. 350 ஆண்டுகளுக்கு முன்பு அந்த தவறு நிகழ்ந்துவிட்டது. அதை மாற்ற முடியாது.
ஆனால் என்ன
ஆனால் ராமர் பிறந்த இடம் அது என்பதை நம்மால் மறுக்க முடியாது. ராமர் அங்குதான் பிறந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் எங்களிடம் இல்லை. ஆனால் ராமாயணம் தொடங்கி பல புராணங்களில் அவர் அங்குதான் பிறந்தார் என்று தகவல்கள் இருக்கிறது. அதை எப்போதும் யாராலும் மறுக்க முடியாது. ஆதாரம் இல்லை ஆனால் அது ஒரு நம்பிக்கை என்று குறிப்பிட்டார்.
என்ன கேள்வி
இதை கேள்வி எழுப்பிய நீதிபதி போட்பே, அயோத்தியில் சில சிலைகள் கிடைத்ததாக அலஹாபாத் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளீர்கள். அதை கார்பன் வயது கணக்கீட்டு முறைப்படி சோதனை செய்து எத்தனை வருடம் பழமையானது என்று கண்டுபிடித்தீர்களா? சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு ராம் லல்லா அமைப்பு, நாங்கள்அந்த சோதனையை செய்யவில்லை என்று விளக்கம் அளித்தது.
என்ன சிக்கல்
இதையடுத்து உலகில் ஏதாவது நீதிமன்றத்தில் அல்லா குறித்தோ, இயேசு குறித்தோ அவர்களின் பிறப்பு குறித்தோ வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை இங்கே சமர்ப்பணம் செய்யுங்கள் என்று நீதிபதிகள் கேட்டனர். இதை அடுத்து விசாரணையில் சமர்ப்பணம் செய்வதாக இந்து அமைப்பான ராம் லல்லா தெரிவித்துள்ளது.
நேற்று இல்லை
இந்த வழக்கில் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கொண்டாடும் நிர்மோஹி அகாரா அமைப்பு அதற்கு உரிய ஆவணங்கள் திருடு போய்விட்டதாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அந்த நிலம் தங்களுடையது என்று உரிமை கொண்டாட போதிய ஆதாரம் தங்களிடம் இல்லை என்று நீதிமன்றத்தில் நிர்மோஹி அகாரா கூறியுள்ளது.