விவசாய சட்டங்களை திரும்பப் பெற முடியாது:மத்திய அமைச்சர்கள் உறுதி.. -8-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
டெல்லி: புதிய விவசாய சட்டங்களை ஒருபோதும் திரும்பப் பெறவே முடியாது என டெல்லியில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியூஷ் கோயல் இருவரும் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் 8-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 15-ந் தேதி நடைபெற உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு 44 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இன்னும் சில நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடக்கம்.... ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை
70 பேர் பலி- பேச்சுவார்த்தை
இந்த போராட்டத்தில் பங்கேற்ற 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டு போயுள்ளனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இதுவரை 7 முறை விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
8-ம் கட்ட பேச்சுவார்த்தை
இந்த நிலையில் இன்று பிற்பகல் டெல்லி விஞ்ஞான பவனில் 8-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது, மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், விவசாய சட்டங்களை திரும்பப் பெறவே முடியாது; போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றனர் மத்திய அமைச்சர்கள்.
ஒட்டுமொத்த நாட்டுக்குமானது..
மேலும் ஒருசில மாநிலங்களுக்காக மட்டும் விவசாய சட்டங்கள் கொண்டுவரப்படவில்லை; ஒட்டுமொத்தமான நாட்டுக்கும்தான் இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன எனவும் கூறினர். ஆனால் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளோ இதனை நிராகரித்தனர். மத்திய அரசு புதிய விவசாய சட்டங்களைக் கைவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என திட்டவட்டமாக கூறினர்.
விவசாய சங்க தலைவர்கள் உறுதி
அத்துடன் வெற்றி பெறுவோம்; அல்லது உயிரை விடுவோம் என பேச்சுவார்த்தை மேஜையில் பதாகைகளையும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் வைத்திருந்தனர். அரசு தரப்புக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான இன்றைய 8-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து வரும் 15-ந் தேதி 9- கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.