முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு பின்னணியில் சதி- உச்சநீதிமன்றம்
டெல்லி: முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு பின்னணியில் சதித்திட்டம் இல்லை என்று கூறிவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், கோகாய் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்கையும் முடித்து வைத்துள்ளது.
ரஞ்சன் கோகாய் எடுத்த சில முடிவுகள், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் தொடர்பாக அவரது கருத்துக்கள் உச்சநீதிமன்ற பதிவுமுறை சீர்திருத்தம் போன்றவை இதுபோன்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட காரணமாக இருந்திருக்கும்.
2018ல் அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வீட்டு அலுவலகத்தில் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார் ஒரு பெண். அவர், ரஞ்சன் கோகாய் தன்னிடம் பலமுறை தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும் தான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து கடும் சர்ச்சைகள் எழுந்த நிலையில் ரஞ்சன் கோகாய் குற்றச்சாட்டுகளை மறுத்தார். நீதித்துறையின் சுதந்திரத்தை அச்சுறுத்த மேற்கொள்ளப்பட்ட சதியே தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு என்று அவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம்பெற்ற உச்ச நீதிமன்ற கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரித்து, குற்றச்சாட்டில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று கூறி ரஞ்சன் கோகாய் நேர்மையானவர் என்று சான்று அளித்தனர்.
ரஞ்சன் கோகாய் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது அசாம் மாநில குடிமக்கள் பதிவேடு குறித்து சில அதிரடி முடிவுகளை எடுத்ததால் அவரை ஏதாவது ஒன்றில் சிக்கவைக்க சதி செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், உச்ச நீதிமன்றம் தானாகவே முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
2019, ஏப்ரல் 25ம் தேதி நீதிபதி பட்நாயக் கமிட்டியை அமைத்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. அந்த குழு உச்சநீதிமன்றத்தில் அளித்த விசாரணை அறிக்கையில், ரஞ்சன் கோகாய் மீதான குற்றச்சாட்டு பின்னணியில் சதி இருக்க கூடும். நீதிபதிகளை தங்களுக்கு சாதகமாக மாற்ற, தொடர்பு கொள்ள முயன்று முடியாததால் சில இடைத் தரகர்கள் இவ்வாறு குற்றச்சாட்டை கிளப்பியிருக்கலாலம் என்று கூறியிருந்தது. இந்த அறிக்கையை ஏற்று ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் சீண்டல் குற்றச்சாட்டை உச்சநீதிமன்றம் இன்று முடித்து வைத்துள்ளது.
வழக்கை முடித்து, நீதிமன்றம் கூறுகையில், முன்னாள் தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக இந்த விசாரணை குழு அமைக்கப்படவில்லை. அந்த குற்றச்சாட்டு தொடர்பான சதித்திட்டத்தை விசாரிப்பதற்காக இந்த குழு அமைக்கப்பட்டது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.