கொரோனா மருந்தை பதுக்கிய விவகாரம்... கம்பீருக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்.. அடுத்து என்ன?
டெல்லி: அத்தியாவசிய கொரோனா மருந்துகளைப் பதுக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து பாஜக எம்பி கவுதம் கம்பீருக்கு விலக்கு அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர், கடந்த 2019 மக்களவை தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அவர், கிழக்கு டெல்லி தொகுதியிலிருந்து எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சீக்ரெட்கள்.. யார் அந்த பாஜக பிரமுகர்?.. சசிகலாவுக்கு உதவுகிறாராமே.. எகிறும் களம்
நாட்டில் கடந்த ஏப்ரல், மே மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சம் தொட்டது. அப்போது கொரோனா சிகிச்சை பயன்படுத்தப்படும் Fabiflu என்ற மருந்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. மருத்துவமனைகளில் இந்த மருந்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், கவுதம் கம்பீருக்குச் சொந்தமான அறக்கட்டளையில் மட்டும் இது அதிகளவில் கிடைத்தது.
டெல்லி ஹைகோர்ட்
இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது மருந்து எப்படிக் கிடைத்தது என்பது குறித்து தங்களுக்குத் தெரியாது என்பது போல மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் டெல்லி நீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருந்தது. அந்த அறிக்கையைக் குப்பை என மிகக் கடுமையாக விமர்சித்திருந்த நீதிபதிகள், எங்களை எளிதாக ஏமாற்றிவிடலாம் என்று நினைக்காதீர்கள் என்றும் விளைவு பயங்கரமாக இருக்கும் என்றும் சாடியிருந்தனர். மேலும், இது தொடர்பாக விராவான அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டிருந்தனர்.
நிராகரிப்பு
இந்நிலையில், தன் மீதும், தனது அறக்கட்டளை மீதும் எவ்வித வழக்கையும் தொடரக் கூடாது என்பதை வலியுறுத்தி கவுதம் கம்பீர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் சந்திரசூட், எம்ஆர் ஷா, கம்பீரின் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும், இது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தடுக்கப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அனுமதிக்க முடியாது
இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறுகையில், "நாட்டில் மருந்திற்குத் தட்டுப்பாடு நிலவி வந்த போது தனிநபரோ அல்லது அறக்கட்டளையோ மருந்துகளைக் கொள்முதல் செய்து விநியோகிக்க அனுமதிக்க முடியாது. தனிநபர் ஒருவரை மருந்தை விநியோகிக்க எப்படி அனுமதிக்க முடியும். பிறகு இதேபோல அனைவரும் தங்கள் சொந்த நலனுக்காக மருந்துகளைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யத் தொடங்கிவிடுவார்கள்" எனக் கடுமையான கருத்துகளை முன் வைத்தார்.
புதிய மனு
அதேநேரம் டெல்லி உயர் நீதிமன்றம் இது தொடர்பாக இதுவரை எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பதால் தேவைப்பட்டால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடுமாறும் அறிவுறுத்தினர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தனது மனுவைக் கவுதம் கம்பீர் வாபஸ் பெற்றுக் கொண்டார். அதேநேரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.