செத்துப்போன தீவிரவாதிகளை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா... கொசுவுடன் ஒப்பிட்டு வி.கே.சிங் கேள்வி
டெல்லி: தூக்கத்தை கெடுக்கும் கொசுக்களை அடித்துக் கொல்லும் போது அதனை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா என்று மத்திய அமைச்சர் வி.கே. சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதற்கு, இந்திய விமானப்படை பதிலடித் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பகுதியான பாலக்கோடு பகுதியில் அமைந்திருந்த, தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விவரம் குறித்து வெளியுறவு செயலாளர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும் விமானப் படையினரின் தாக்குதலில் 300 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியானது. ஆனால், என்ன ஆதாரம் உள்ளது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பதிலளித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் இதுபோன்ற கேள்வி இந்திய விமானப்படை மீது சந்தேகப்படுவதற்கு சமம் என்று விளக்கம் அளித்தார். அதே நேரம், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பாலக்கோட்டில் 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறினார்.
ரபேல் ஆவணங்களை வெளியிட உதவியது யார்? என்ன நடந்தாலும் சொல்ல மாட்டேன்.. என்.ராம் அதிரடி!
இந்த நிலையில், மத்திய அமைச்சர் வி.கே. சிங் ஹிந்தியில் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில், அதிகாலை 3.30 மணிக்கு நிறைய கொசுக்கள் வருகின்றன. நான் கொசுக்களை அடித்துக் கொன்று விட்டு நிம்மதியாக தூங்குகிறேன். அந்த நேரத்தில் செத்துப்போன கொசுக்களை எண்ணிக்கொண்டு இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் .
இதேபோன்று, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஹரியானா அமைச்சர் அணில் விஜ், அடுத்த முறை இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடக்கும் போது எதிர்க்கட்சியினரை சேர்த்து அனுப்ப வேண்டும். அப்போது, அவர்கள் இறந்த சடலங்களை எண்ணிக் கொண்டு வந்துவிடுவார்கள் என்றார்.