60 கேஸ்களை சுமந்து நின்ற துபேவை என்கவுண்டர் செய்தது சரியா?.. இதுவரை காத்தவர்களுக்கு என்ன தண்டனை?
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரபல தாதா விகாஸ் துபே மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து இன்று அதிகாலை கான்பூர் கொண்டு வரும் வழியில் தப்பிச் செல்ல முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக உபி போலீசார் தெரிவித்துள்ளனர். 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் விகாஸ் துபேவை என்கவுண்டரில் கொன்றது நியாயமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Recommended Video
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரைக்கும் விகாஸ் துபே மீது 60க்கு மேற்பட்ட கொலை, கொள்ளை, நில ஆக்கிரமிப்பு போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், எந்த வழக்கிலும் அவர் மீது இதுவரை குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. காலம் காலமாக அரசியல்வாதிகளை தன்னிடம் வைத்துக் கொண்டு அரசியல் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் எம்.எல்.ஏ. ஆகவும் முயற்சித்துள்ளார்.
தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர் ஒருவரையே காவல் நிலையத்தில் வைத்து சுட்டுக் கொன்றவர்தான் இந்த விகாஸ் துபே. ஏன் சமீபத்தில் பிக்ரு கிராமத்தில் போலீஸ் அதிகாரிகள் உள்பட எட்டு பேரை சுட்டுக் கொன்று தப்பிய பின்னரும் அவர் ஆளும்கட்சி பிரமுகர் ஒருவரை சந்தித்ததாக செய்தி வெளியானது.
அரசியல் தொடர்பு.. ஜாதி கொலை.. உ.பியின் "ராஜனாக" உருவெடுத்த விகாஸ் துபே.. புதுப்பேட்டை ஸ்டைல் வரலாறு!
4 மாநில பயணம்
இந்த நிலையில் கடந்த ஆறு நாட்களாக தனிப் படை அமைத்து தேடி வந்தபோதும், அவரை கைது செய்ய முடியவில்லை. போலி அடையாள அட்டை வைத்துக் கொண்டு, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லியின் எல்லை என்று சுற்றித் திரிந்துள்ளார். சுமார் 1500 கி. மீட்டர் காரில் பயணித்துள்ளார். ஆனால், யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை.
கோவிலில் கைது
இந்த நிலையில் நேற்று உஜ்ஜைனில் இருக்கும் மகாகாளீஸ்வரர் கோயிலுக்கு சென்று விட்டு வெளியே வரும்போது கைது செய்யப்பட்டார். அந்த தகவலும் தெளிவாக இல்லை. கைது செய்யப்பட்டாரா? சரண் அடைந்தாரா என்பதில் சர்ச்சை நீடித்தது. ஒரு மாநிலத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து காலம் காலமாக குற்றங்களை வெளிப்படையாக செய்து, ஆனால், எந்தக் குற்றத்திலும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத நிலையில், இன்று என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் துணை
1990 ஆம் ஆண்டுகளில் இருந்து கொலை, கொள்ளை, நில ஆக்கிரமிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வந்த விகாஸ் துபே கிராமங்களில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளார். நிலங்களை தானும் ஆக்கிரமிப்பு செய்து, அந்த நிலங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வருமாறு அனைத்து ஏற்பாடுகளையும் அரசு அதிகாரிகளின் துணையுடன் செய்துள்ளார்.
சார்ஜ்ஷீட்டே கிடையாது
இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டபோதும் அரசியல் தலையீடு காரணமாக இதுவரை தண்டிக்கப்படவில்லை. உத்தரப்பிரதேச அமைச்சர் 2001ல் கொல்லப்பட்ட பின்னரும் இவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. ஏன் என்ற கேள்வி எழுகிறது. இவரை எதிர்த்து யாருமே மேல்முறையீடு கூட செல்ல முடியவில்லை. அந்தளவிற்கு செல்வாக்கு பெற்று வலம் வந்துள்ளார்.
தொடரும் மர்மம்
சமீபத்திலும் பிக்ரு கிராமத்தில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 பேரை சுட்டுக் கொன்று தப்பிய பின்னரும், அவரை கைது செய்ய சென்றபோது ஏன் எந்த ஆயுதங்களும் கையில் இல்லாமல் போலீசார் சென்றனர்? ஏன் சிறப்பு பாதுகாப்புப் படை அனுப்பப்படவில்லை? விகாஸ் துபேவுடன் ஒரு போலீஸ் அதிகாரிக்கு தொடர்பு இருக்கிறது என்று சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் டிஎஸ்பி கூறியபோதும் ஏன் அந்த குறிப்பிட்ட போலீஸ் அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
ஏன் கடிவாளம் போடலை
எப்போதும் எந்த மாநிலத்திலும் உள்துறை அமைச்சகம், காவல்துறை இரண்டும் முதல்வரின் கீழ்தான் வருகிறது. அப்படி இருக்கும்போது ஏன் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது. இவர்களுக்கு குற்றவாளிகளின் வரலாறு ஒவ்வொரு முறையும் பொறுப்பு ஏற்கும்போது கொண்டு செல்லப்படும். அந்த வகையில் ஏன் விகாஸ் மீது எந்த நடவடிக்கையும் இல்லை? உள்துறை என்பது சாதாரண பதவி இல்லை. இதுபோன்ற குற்றவாளிகளுக்கு கடிவாளம் போட வேண்டியது அரசின் கையில் இருக்கிறது.
ஆரம்பத்திலேயே ஒடுக்காதது ஏன்
உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக ஆதித்யநாத் பொறுப்பேற்றபோது மாநிலத்தில் மாஃபியாக்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருந்தார். இது தொடக்கமாக இருக்கட்டும். அரசியல்வாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இருக்கக் கூடாது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். அப்போதுதான் தாதாக்களை களையெடுக்க முடியும். என்கவுண்டர் இதற்கு தீர்வு கிடையாது.
இது நீதியா
தற்போது விகாஸ் துபே வேண்டுமானாலும் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம். ஆனால், இவருக்கு இத்தனை ஆண்டுகள் துணையாக இருந்த அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், போலீசாருக்கு என்ன தண்டனை என்ற கேள்வியும் எழுகிறது. அரசு துணை இல்லாமல் எந்த தாதாவும் உருவாக முடியாது. உருவானாலும் ஒடுக்கும் வல்லமை படைத்தது அரசு. இந்த வழக்கில் இருந்து நாடு எதை கற்றுக் கொள்ளப் போகிறது என்பது திறந்த கேள்வியாக இருக்கட்டும்.