இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா ஆதரவு.. மூக்கை நுழைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ.. சிவசேனா நச் பதிலடி
டெல்லி: இந்தியாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விசாயிகளுக்கு கனடா ஆதரவாக இருக்கும் என்று அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த போராட்டம் குறித்து முதன்முதலாக ஒரு வெளிநாட்டு தலைவர் கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து பஞ்சாப் விவசாயிகள் தலைநகர் டெல்லி நோக்கி பேரணி தொடங்கினார்கள். அரியானா எல்லை, டெல்லி எல்லைகளில் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு ஆகியவற்றை சந்தித்த அவர்கள் ஒரு வழியாக டெல்லிக்குள் நுழைந்தனர். டெல்லி புராரி மைதானத்தில் இன்று 6-வது நானாக அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார். குருநானக்கின் 551 வது பிறந்த நாளையொட்டி இணையதள நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது: விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக இந்தியாவில் இருந்து செய்திகள் வெளிவருகின்றன.நாங்கள் அனைவரும் குடும்பம் மற்றும் நண்பர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறோம். அமைதியான போராட்டத்தின் மூலம் உங்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க கனடா எப்போதும் துணையாக இருக்கும் என்பதை நான் உங்களுக்கு நினைவு கூறுகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
டெல்லி சலோ... விவசாயிகள் போராட்டத்தில் இணைந்த பீம் ஆர்மி, ஜேஎன்யூ மாணவர்கள்
இதனிடையே, இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிட வேண்டாம் என்று சிவசேனா அவருக்கு பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி டுவிட்டரிவில் வெளியிட்ட பதிவில், உங்களுடைய கருத்து கவலைப்படதக்க அம்சம்தான். ஆனால் இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை.
இது மற்றொரு நாட்டின் அரசியலுக்கு தீனி அல்ல. நாங்கள் எப்போதும் மற்ற நாடுகளின் உரிமைகளை மதிக்கிறோம். அதேபோல் நீங்களும் மதிக்க வேண்டும். மற்ற நாடுகள் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து கூறுவதற்கு முன்பு, பிரதமர் மோடி இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.