ரத்தான தபால்துறை தேர்வு மீண்டும் செப்.15ல் நடக்கிறது.. இந்தி பேசாத மாநிலங்களுக்கு சூப்பர் அறிவிப்பு
டெல்லி: தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தபால் துறையில் தபால்காரர், மெயில் கார்டு, உதவியாளர் உள்பட பல்வேறு பணிகளை நிரப்ப ஜூலை 14ம் தேதி தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முதல் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருந்தது. இரண்டாம் வினாத்தாள் மட்டுமே மாநில மொழிகளில் இருந்தது.
தபால் துறை தேர்வில் தமிழ் உள்பட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடந்து முடிந்த தபால்துறை தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. விரைவில் நாடு முழுவதும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தபால் துறை தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த சில நாள்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இதன்படி ரத்து செய்யப்பட்ட தபால் துறை பணியிடங்களுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 15 தேதி மீண்டும் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்போது இந்தி பேசாத மாநிலங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட அட்டவணையில் உள்ள அனைத்து மாநில மொழிகளிலும் வழக்கம் போல் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.