முடிவை மாற்றாத ராகுல்.. மூழ்கும் காங். கப்பல்.. கரை சேர்க்க தலைவராகும் அமரீந்தர் சிங்?
டெல்லி: ராகுல்காந்தி தனது ராஜினாமா முடிவில் பிடிவாதமாக இருப்பதால் காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. புதிய தலைவராக பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் 44 இடங்களைப் பெற்ற அக்கட்சி இம்முறை சற்று கூடுதல் இடங்களை பெற்று 52 இடங்களை பெற்றுள்ளது. அதோடு நேரு குடும்ப தொகுதியும் 39 ஆண்டுகளாக நேரு குடும்பத்தினரிடம் இருந்த தொகுதியுமான அமேதி தொகுதியில் ராகுல்காந்தி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்ம்ரிதி இராணியிடம் பரிதாபமாக தோற்றுப் போனார். இது குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். ஆனால் அவரது ராஜினாமாவை காரியக் கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தக் கூட்டத்தில் ப.சிதம்பரம், அசோக் கெலாட், கமல்நாத் போன்றோர் தங்களது மகன்களுக்கு சீட் ஒதுக்க கேட்டு ராகுலை வற்புறுத்தியது தொடர்பாக ராகுல் கோபமாக பேசினார் என்று செய்திகள் வெளியானது ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜெவாலா அறிக்கை விட்டிருந்தார்.
கார்த்திக்கு சீட்டு கொடுக்காவிட்டால்.. நான் இதை செய்வேன்.. சோனியாவையே மிரட்டி சாதித்த ப.சிதம்பரம்
ராஜினாமா உறுதி
இந்த நிலையில் ராகுல் தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவரிடம் பேசிய சமாதானம் எதையும் ராகுல் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இந்நிலையில் ராகுலின் தங்கையும் காங்கிரஸ் கட்சியின் உ.பி மாநில செயலாளருமான பிரியங்காவும் ராகுலை சமாதனப் படுத்த முயற்சித்துள்ளார். இருந்தாலும் ராகுல் தனது ராஜினாமா முடிவில் உறுதியாக உள்ளதோடு காங்கிரஸ் கட்சிக்கு தனது குடும்ப உறுப்பினர் தவிர வேறு ஒருவரை தலைவராக தேர்வு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
கைகொடுத்த பஞ்சாப்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாதான் காங்கிரசுக்கு பெரிய அளவில் கை கொடுத்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 தொகுதிகள், கேரளாவில் 15 தொகுதிகள் என அக்கட்சி வென்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக வட இந்தியாவில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ள ஒரே மாநிலம் பஞ்சாப் மட்டும்தான் அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 13 தொகுதிகளில் 8 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. ஆகவே வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டிய நிர்பந்தம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் வடஇந்தியாவில் ஒரு வலிமையான தலைவரை காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் ஆக்கும் எண்ணத்தில் ராகுல் உள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர்
வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் தனது வெற்றியை நிரூபித்துள்ளதால் பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக நியமிக்கும் எண்ணம் ராகுலிடம் இருப்பதாகத் தெரிகிறது. அமரீந்தர் சிங் நேரு குடும்பத்தின் நீண்ட கால விசுவாசி. 2017 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல் என இரு தேர்தல்களில் பஞ்சாப்பில் காங்கிரஸ் வெற்றி பெற காரணமாக இருந்தவர் இந்த அமரீந்தர் சிங். வடமாநிலங்களில் மோடி அலை கடுமையாக வீசியபோதும், பஞ்சாப்பில் பாஜக - அகாலி தள் கூட்டணிக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஒரு இடத்தை ஆம் ஆத்மி வென்றது. மீதி 8 இடங்களையும் காங்கிரசே கைப்பற்றியது.
அம்ரீந்தருக்கு வாய்ப்பு
அதற்கு காரணம் அமரீந்தர் சிங்கின் ஆட்சி மற்றும் பிரச்சாரமே காரணம். ஆகவே அமரீந்தர் சிங்கை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆக்கலாம் என்ற பேச்சு காங்கிரஸ் கட்சியில் சற்று சத்தமாகவே கேட்க தொடங்கியுள்ளது. ராகுல்காந்தி இந்த முடிவில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் ஓரிரு நாட்களில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் மீண்டும் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.