200 ஊழியர்களை நீக்கிய கார் விற்பனை இணையதளம்.. எதிர்காலம் குறித்த கேள்விக்கு விடைத்தேடும் துயரம்
டெல்லி: ஆன்லைன் மூலம் கார் விற்பனை செய்யும் இணையதளமான கார் தேக்கோ 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மற்ற ஊழியர்களுக்கு சம்பள குறைப்பையும் செய்துள்ளது.
கொரோனா படுத்தும்பாடால் இந்திய பொருளாதாரம் கேள்விக்குறியானது போல் பல நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரமும் அந்தரத்தில் தொங்கி நிற்கிறது. பெரும்பாலான நிறுவனங்களில் ஆட்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஜொமாட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களும் ஓலா உள்ளிட்ட வாடகைக் கார் நிறுவனங்களும் பெரும்பாலான ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டன. மேலும் சம்பள குறைப்பிலும் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதால் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்.
தனியார் ஜெட், சார்ட்டட் விமானங்களும் இனி பறக்கலாம்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு
இணையதளம்
அது போல் கார் விற்பனை இணையதளமான கார் தேக்கோ நிறுவனமும் 5000 ஊழியர்களில் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டது. மற்ற தொழிலாளர்களுக்கு ஊதிய குறைப்பையும் அமல்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் ஆன்லைன் மூலம் பழைய, புதிய கார் வாங்கவும் விற்பனை செய்யவும் இணையதளத்தை நடத்தி வருகிறது.
ஆன்லைன்
இதற்காக இந்த இணையதளம் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் 4000-க்கும் மேற்பட்ட கார் டீலர்களுடன் டை அப் வைத்துள்ளது. அத்துடன் மக்கள் எளிதாக கார்களை வாங்க சில நிதி நிறுவனங்களுடனும் கைகோர்த்துள்ளது. மிகப் பெரிய நிறுவனமான இந்த தளத்தில் விலைக்கு வந்துள்ள கார்கள இஞ்ச் பை இஞ்சாக ஆன்லைன் வீடியோ மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நேராக சென்று காரை பார்க்க வேண்டும் என்ற அவசியமே இல்லை இங்கு பிரபல பிராண்டுகளின் மாடல்களும் கிடைக்கும் என்பதாலும் நேரில் பார்த்து வாங்குவது போல் புகைப்படங்கள், வீடியோக்கள் இருக்கும் என்பதாலும் இதற்கு ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
கார் தேக்கோ
தனிப்பட்ட நபர்களும் தங்கள் கார்களை விற்கவும் வாங்கவும் இந்த இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகைய பிரபல நிறுவனத்தில் ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் வெளியானவுடன் கார் தேக்கோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது அவர் மேற்கண்ட தகவலை உறுதி செய்தார். மேலும் ஊழியர்களை நீக்கியதற்கான காரணத்தை அவர் கூற மறுத்துவிட்டார். மேலும் ஆட்குறைப்பு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊழியர்கள்
அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு 12 சதவீத ஊதியக் குறைப்பும், 5 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு 15 சதவீத ஊதிய குறைப்பும் செய்யப்படும். அது மட்டுமல்லாமல் 15 லட்சம் முதல் 40 லட்சம் வரை ஊதியம் பெறுவோர் மற்றும் 40 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு முறையே 20 சதவீதமும் 22.5 சதவீதமும் ஊதிய குறைப்பு செய்யப்படவுள்ளது. இது மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை அமலில் இருக்கும். ஆன்லைன் மார்க்கெட்டான ஸ்னாப்டீல் கடந்த வாரம் 800 தொழிலாளர்களின் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.