டெல்லியில் நுழையும் விவசாயிகள் குறித்து முடிவு செய்ய வேண்டியது போலீஸ்தான்.. சுப்ரீம் கோர்ட்
டெல்லி: குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருப்பது, சட்டம் மற்றும் ஒழுங்கு விஷயமாக இருப்பதால் டெல்லி காவல்துறை தான் இந்த விஷயத்தில் முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். எனினும் விவசாயிகள் பேரணிக்கு தடை கோரிய காவல்துறையின் வழக்கை நாளை மறுநாள் விசாரிப்பதாக கூறி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால், மத்திய அரசு இதுவரை 9 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. நாளை 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
வேளாண் சட்டங்களை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ளது. இந்நிலையில் இச்சட்டங்களை நிரந்தரமாக ரத்து செய்வது மட்டுமே தீர்வு என்று கூறி விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தை தொடர்கிறார்கள்.
இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி குடியரசு தினத்தன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன.
குடியரசு தின அணிவகுப்பு நடக்கும் நிலையில், இந்த பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி காவல்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று இது போன்ற போராட்டங்கள் நடந்தால், அது தேசத்தையே இழிவு படுத்தும் செயல் என்று மத்திய அரசு தனது மனுவில் கூறியிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
ராணுவ ரகசியங்களை அசால்ட்டாக வாட்ஸ் அப்பில் பேசிய அர்னாப் கோஸ்வாமி.. விசாரணை நடத்த காங். வலியுறுத்தல்
அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, "டெல்லிக்குள் யார் யார் நுழைய வேண்டும் என்பதை டெல்லிகாவல்துறையினர் தீர்மானிக்க வேண்டும் என்று நாங்கள் கடைசியாக சொன்னோம். யாரை அனுமதிக்கக்கூடாது, நுழையக்கூடிய நபர்களின் எண்ணிக்கை என அனைத்தையும் சட்டம் மற்றும் ஒழுங்கு விஷயங்களை கையாலும் காவல்துறையினரால் கையாளப்பட வேண்டும்" என்றார்கள்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், விவசாயிகளின் டிராக்டர் பேரணி சட்டவிரோதமானது என்றும் டெல்லியில் 5000 பேர் நுழைவார்கள் என்றும் கூறினார். இதையடுத்து இந்த வழக்கை நாளை மறுநாள் (ஜன.200 விசாரிப்பதாக கூறி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.