ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பாலியல் புகார் கூறிய பெண் மீது பதிவான மோசடி புகார்.. கோர்ட் முடித்து வைப்பு
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்த பெண்ணுக்கு எதிராக, இளைஞர் ஒருவர் தொடர்ந்த மோசடி வழக்கு முடித்து வைக்கப்பட்டு உள்ளது
குறிப்பிட்ட அந்தப் பெண் ஊழியர் கடந்த ஏப்ரல் மாதம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதையடுத்து புகார் தொடர்பாக விசாரிப்பதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி விசாரணையில், தலைமை நீதிபதி மீது எந்த தவறும் இல்லை என்றும் கடந்த மே மாதம் அறிக்கை வழங்கப்பட்டது.
இதனிடையே அந்த பெண் மீது டெல்லி தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு ஒன்று நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உரிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி டெல்லி காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு வழக்கை முடித்து வைப்பதாக ஒரு அறிக்கையை கடந்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
கடந்த மார்ச் மாதம் நவீன் குமார் என்ற 31 வயது இளைஞர், இந்த பெண் மீது டெல்லியில் உள்ள திலக் மார்க் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
தேஜஸ் என்றால் வேகம்.. மதுரை-சென்னை ரயிலின் பெயரை தமிழில் மாற்ற வாய்ப்பில்லை.. கைவிரித்த அதிகாரிகள்
இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி நவீன் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி மணிஷ் குரானா உத்தரவிட்டார். அதை ஏற்று அவரும் நேரில் ஆஜரானார். விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் முகேஷும், நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது இந்த வழக்கை முடித்துக் கொள்ள, தான் விரும்புவதாகவும், அந்த பெண் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க தான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதை, ஏற்று காவல்துறை இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர சம்மதித்தது இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.