சூசையப்பர் ஆலயத் திருவிழாவில் ஜல்லிக்கட்டு.. அனுமதி கோரிய வழக்கு.. ஒருவாரத்தில் பரிசீலிக்க உத்தரவு
சென்னை: அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய மனுவை ஒரு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், மலத்தான் குளம் கிராமத்தில் சூசையப்பர் ஆலயத் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தர் பெஞ்சமின் சென்னை உயர்நீதிமன்றம் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கடந்த 40 ஆண்டுகளாக திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்தபட்டு வருவதாகவும், புத்தாண்டு தினத்தையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர்அலுவலத்திலும், பாதுகாப்பு கோரி காவல்துறையிடமும் அளித்த மனு மீது எந்த முடிவும் எடுக்காததால் மனு மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு, விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் மனுதாரர் அளித்த மனுவை பரிசீலித்து, ஒரு வாரத்தில் முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.