மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு
Recommended Video
டெல்லி: மேகதாதுவில் கர்நாடக அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ. 5900 கோடியில் புதிதாக அணை கட்ட கர்நாடகம் முயற்சித்து வருகிறது. இதற்கான அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.
மேலும் இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும். இந்த சூழலில் காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று கூடியது.
ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதம் டெல்லியில் முதல் கூட்டம் நடைபெற்று தற்போது மாதந்தோறும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கியது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் தமிழக அரசு தெரிவித்தது.