ஏர்செல் மேக்சிஸ் வழக்கு.. ப.சிதம்பரம், கார்த்தியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி மாற்றம்
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தொடர்ந்துள்ள முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 5-ஆம் தேதி வழங்கப்படுவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் ரூ 3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதற்கு கார்த்தி சிதம்பரமும் உதவி செய்தார் என்றும் அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிபிஐயும் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இருவருக்கும் எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் ப.சிதம்பரமும் கார்த்தியும் தொடர்ந்த முன்ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஓபி ஷைனி முன்பு, சிபிஐ சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே எம் நடராஜ் தனது வாதத்தை முன் வைத்தார்.
74 வயதாகிறது.. தயவு செய்து என்னை திகார் சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள்.. ப. சிதம்பரம் கோரிக்கை
அவர் கூறுகையில் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்து விசாரித்தால்தான் பல உண்மைகள் வெளியே வரும். ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தேசநலன் சார்ந்தது.
எனவே வழக்கை நாளை விசாரிக்கவும் சிபிஐ காவலை நாளை வரை மட்டுமே நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என சிபிஐ தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி ஓபி ஷைனி நாளை தீர்ப்பளிப்பார் என கூறப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி ஷைனி, முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதியை வரும் 5-ஆம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதையடுத்து ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற உத்தரவின் படி உடனடியாக இது விசாரிக்கப்படும் என தெரிகிறது.