ரூ.3,250 கோடி கடன் முறைகேடு.. சந்தா கோச்சார் மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு
டெல்லி:ஐசிஐசிஐ வங்கி, வீடியோகான் நிறுவனத்துக்கு 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கிய முறைகேட்டில் ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் சந்தாகோச்சார் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.
ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக இருந்தவர் சந்தா கோச்சார். சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார், என்யூபவர் பவர் என்ற பெயரிலான நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாயை வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் முதலீடு செய்தார்.
கணவர் தீபக் கோச்சார் நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கு பிரதிபலனாக சந்தா கோச்சார் ஒரு காரியம் செய்தார். அதாவது வீடியோகான் நிறுவனத்துக்கு 2012-ம் ஆண்டு ரூ.3,200 கோடி கடன் வழங்கினார்.அந்தக் கடன் வழங்கிய விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பது வெளியே தகவல்கள் கசிந்தன.
2017-ம் ஆண்டு வரை இந்தக் கடனில் 85 சதவீதத்தை வீடியோகான் நிறுவனம் திருப்பிச் செலுத்தாமல் வாராக்கடனாக மாறியது. இதையடுத்து, இந்த விவகாரம் ரிசர்வ் வங்கிக்கு வந்ததையடுத்து, ஐசிஐசிஐ வங்கி சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
அந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டதையடுத்து சந்தா கோச்சார் கட்டாய விடுப்பில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் அனுப்பப்பட்டார். அதன்பின்னர், சிபிஐயும் சந்தா கோச்சார், தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் ஆகியோரிடம் விசாரணையை நடத்தியது.
இந்நிலையில், வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கிக் கடன் அளித்த விவகாரத்தில் சிபிஐ முறைப்படி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து உள்ளது. மும்பை, அவுரங்காபாத் உள்ளிட்ட 4 இடங்களில் சந்தா கோச்சார் கணவரின் அலுவலகம், வீடியோகான் நிறுவனங்களிலும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.