2ஜி வழக்கின் விசாரணை அதிகாரி உள்பட 20 பேர் மாற்றம்.. அதிரடியை தொடங்கிய நாகேஸ்வர ராவ்
டெல்லி: சிபிஐ அமைப்பில் 20 அதிகாரிகளை அந்த அமைப்பின் இடைக்கால இயக்குநரான நாகேஸ்வர ராவ் அதிரடியாக பணியிட மாற்றம் செய்துள்ளார்.
அதன்படி, 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கின் விசாரணை அதிகாரி விவேக் பிரியதர்ஷினியும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஊழல் தடுப்புப் பிரிவில் இருந்த அவர், சண்டிகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட வழக்கை விசாரித்து வரும் சரவணன் மாற்றப்பட்டுள்ளார். போலீஸாரால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை விசாரித்து வரும் அவர், மும்பை வங்கி முறைகேடு விசாரணைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இப்பிரிவுதான் தொழிலதிபர்கள் நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரித்து வருகிறது. அதே நேரத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு விசாரணையையும் அவர் தொடர்வார் என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது.
சிபிஐ அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சிறப்புப் பிரிவு அதிகாரியாக பிரேம் கெளதம் மாற்றப்பட்டுள்ளார். அவர் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பேற்கிறார். சத்தீஸ்கரில் சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரியாக இருந்த ராம் கோபால், சிபிஐ அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.
சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. அதையடுத்து, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமித்தது.
இதை எதிர்த்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவை செல்லாது என்றும், அலோக் வர்மா மீண்டும் இயக்குநர் பதவியை தொடரலாம் என்றும் தெரிவித்தது. எனினும், அலோக் வர்மா குறித்த இறுதி முடிவை பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு எடுக்கும் என்று தெரிவித்திருந்தது.
அதையடுத்து அலோக் வர்மா மீண்டும் பதவியேற்ற 2 நாள்களில் அவரை பதவி நீக்கம் செய்வதாக உயர்நிலைக்குழு அறிவித்தது. இதைத்தொடர்ந்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் மீண்டும் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.