சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை!
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இன்னும் சில நாட்களில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இன்னும் சில நாட்களில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. சிபிஐ இவரை விசாரிக்க மத்திய அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்த எப்ஐஆரில் ப.சிதம்பரம் பெயர் சேர்க்கப்படவில்லை. அதேபோல் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.
ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது மட்டுமே வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது..
இது தொடர்பான வழக்கில் சிபிஐ கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. அதேபோல் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் பல முறை விசாரிக்கப்பட்டார். இந்த வழக்கில் சிபிஐ ப.சிதம்பரையும் கைது செய்து விசாரிக்க நினைத்தது.
ஆனால் இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை ஜூலை 3ஆம் தேதி வரை கைது செய்ய டெல்லி ஹைகோர்ட் தடைவிதித்தது. இதையடுத்து இவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி வேண்டி, சிபிஐ மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி 21ம் தேதி கடிதம் அனுப்பியது.
இந்த நிலையில் தற்போது ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு சிபிஐக்கு அனுமதி வழங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளையே வெளியாகும் என்று கூறுகிறார்கள். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இன்னும் சில நாட்களில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே ப.சிதம்பரம் மீது சிபிஐ ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.