2ஜி: ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி சிபிஐ மனு
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. இதை ஏற்றுக் கொன்ட உயர்நீதிமன்றம், ஆ.ராசா,. கனிமொழி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற நடைமுறையை கடைபிடித்ததால் ரூ1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டது என 2010-ம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தார் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய். இது நாடு முழுவதும் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 2ஜி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை டெல்லி உயர்நீதிமன்றம் அமைத்தது.
அதே ஆண்டு மே மாதம் திமுகவின் கனிமொழியும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார். 2ஜி அலைக்கற்றை முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்திட்டம் இருந்து சட்டவிரோதமாக, கனிமொழி இயக்குநராக இருந்த கலைஞர் டிவிக்கு பணம் பெறப்பட்டது என்பது குற்றச்சாட்டு.
டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனைவரும் ஜாமீனில் அடுத்தடுத்து விடுதலையாகினர். இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி ஷைனி விசாரித்து வந்தார். ஆ.ராசா, தாமே வாதாடி தம் மீது எந்த குற்றமும் இல்லை என ஆதாரங்களை முன்வைத்தார்.
2017-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி 2ஜிவழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ ஏற்கனவே மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மனு மீதான விசாரணை ஜூலை 30-ந் தேதி நடைபெற இருந்தது.
இந்நிலையில் தாங்கள் செய்த மனு மீதான விசாரணையை விரைவு படுத்தக் கோரி சிபிஐ இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஏ.கே. சாவ்லா, வழக்கில் விடுதலையான அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
தற்போதைய லோக்சபா தேர்தலில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் போட்டியிட்டு எம்.பி.க்களாகி உள்ளனர். இந்த நிலையில் 2ஜி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பது மீண்டும் அரசியல் புயல் வீசப் போகிறது என்பதற்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.
மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் திமுகவுக்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தவே செய்யும்.