ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திஹார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இம்மனு மீதான விசாரணை செப்டம்பர் 23-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது 14 நாட்கள் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்தது.
இதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். இதற்கு ப. சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 3-ந் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் திஹார் சிறையில் ப.சிதம்பரம் மீண்டும் அடைக்கப்பட்டார்.
எதிரி வெளியே என்றால் தலையை சீவியிருப்பேன்.. திவாகரன் திடீர் ஆவேசம்!
இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தவருக்கு எந்த சலுகையும் காட்டக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து வரும் 23-ந் தேதி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.